கோலாலம்பூர், செப்டம்பர் 30-
ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு, ஒரு நூற்றாண்டு கால பழமை வாய்ந்த சுபாங் ஜெயா, சீபில்டு தோட்ட ஸ்ரீ மகாமாரியம்மன் கோவிலில் தாக்குதல் நடத்துவதற்கு பயங்காரவாத நடவடிக்கையில் ஈடுபட்ட குற்றத்திற்காக முன்னாள் WOLF PACK கும்பலின் தலைவனுக்கு கோலாலம்பூர் உயர் நீதிமன்றம் இன்று 10 ஆண்டு சிறைத் தண்டனை விதித்தது.
39 வயது மஹத் மாமத் என்ற அந்த நபருக்கு எதிராக பிராசிகியூஷன் தரப்பு கொண்டு வந்துள்ள 8 குற்றச்சாட்டடுகளில் நியாயமான சந்தேகங்களை எழுப்புவதில் அந்த நபரின் வழக்கறிஞர் தோல்விக் கண்டதைத் தொடர்ந்து சம்பந்தப்பட்ட நபர், அந்த கோவிலுக்கு எதிராக பயங்கரவாத நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளார் என்பது தெளிவாகியுள்ளது என்று நீதிபதி டத்தோ நூரின் பதருடின் தமது தீர்ப்பில் தெரிவித்தார்.
சம்பந்தப்பட்ட நபர், SKIZOFRENIA என்ற ஒரு வகையான மன பாதிப்புக்கு ஆளாகியிருப்பதாக மருத்துவச் சான்றிதழ் காட்டப்பட்டுள்ளது என்ற போதிலும் அவர் உண்மையிலேயே மனநலப்பாதிப்பை கொண்டுள்ளார் என்பதற்கு நடப்பு சட்டத்திற்கு சவால் விடும் வகையில் எந்தவொரு ஆதாரமும் காட்டப்படவில்லை என்று நீதிபதி தமது அதிரடித் தீர்ப்பில் தெரிவித்தார்.
மன நல பாதிப்பு உள்ளவர், அந்த இந்துக்கோவிலில் சுயனைவுடன், தெளிந்த சிந்தனையில்தான் தாக்குதல் நடத்துவற்கு பயங்கரவாத நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளார் என்பதற்கு போதுமான ஆதாரங்கள் நீதிமன்றத்தில் காட்டப்பட்டுள்ளதாக நீதிபதி தமது தீர்ப்பில் விளக்கினார்.
இந்த தாக்குதல் நடத்துவதற்கு, சம்பந்தப்பட்ட நபர், ஆயுதங்கள் மற்றும் வெடிகுண்டு குழாய்கள் போன்ற அபாயகரமான ஆயுதங்களை அந்த தோட்டத்தில் பதுக்கி வைத்து இருந்தது கண்டு பிடிக்கப்பட்டுள்ளன. இந்த தாக்குதலை திட்டமிட்டே நடத்த வேண்டும் என்ற நோக்கில் அந்த நபர் சுயசிந்தனையுடன் செயல்பட்டுள்ளார் என்பதற்கு இதைவிட போதுமான ஆதாரங்கள் வேண்டுமா? என்று நீதிபதி கேள்வி எழுப்பினார்.
சீபில்டு தோட்ட ஸ்ரீ மகாமாரியம்மன் கோவிவில் நடத்துவதற்கு பயங்கரவாத நடவடிக்கையில் ஈடுபட்டது, அந்த கோவிலுக்கு எதிராக மிரட்டல் விடுத்தது, Sejati Sejiwa என்ற WhatsApp குழுமத்தின் வாயிலாக நான்கு தனிநபர்களை கொலை செய்யப் போவதாக அச்சுறுத்தல் விடுத்தது, ஒரு பங்கரவாத நடவடிக்கையில் ஈடுபடுவதற்கு தயாராகும் வகையில் துப்பாக்கியை பயன்படுத்தி பயிற்சி அளித்தது முதலிய எட்டு குற்றச்சாட்டுகளை சம்பந்தப்பட்ட நபர் மீது கொண்டு வரப்பட்டது.
இந்த எட்டு குற்றச்சாட்டுகளில் 7 குற்றச்சாட்டுகளை சம்பந்தப்பட்ட நபர், கடந்த 2019 ஆம் ஆண்டு மே 5 ஆம் தேதி புக்கிட் அமான் போலீஸ் தலைமையகத்தின் சிறப்பு பிரிவில் புரிந்ததாக தெரிவிக்கப்பட்டது.
எட்டாவது குற்றச்சாட்டானது, பயங்கரவாதக் கும்பலான Daesh தீவிரவாதக் கும்பலின் பொருட்களை தன் வசம் வைத்திருந்ததாக அந்த நபர் மீது குற்றச்சாட்டு கொண்டு வரப்பட்டது.