புத்ராஜெயா,செப்டம்பர் 30-
நாட்டின் ஆரோக்கியமான பொருளாதார அடைவு நிலைக்கு ஏற்ப மக்களிடையே வறுமையை துடைத்தொழிப்பதற்கான முயற்சிகளை அதிகப்படுத்துவதற்கான கடப்பாட்டை அரசாங்கம் கொண்டுள்ளது.
இது, மடானி பொருளாதார செயல்வடிவத்திற்கேற்ப யாரும் பின்தங்கி விடாமல் இருப்பதை அரசாங்கம் உறுதி செய்யும் என்று பொருளாதார அமைச்சர் Rafizi Ramli கூறினார்.
அவ்வாறு செய்யாவிடில் நாட்டின் பொருளாதார வளர்ச்சி சிறப்பானதாக இருந்தாலும் பெரும் பணக்காரர்கள் மற்றும் பரம ஏழைகள் என இரு பிரிவுகளாக நாம் பிளவுபட்டு விடுவோம் என அவர் தெரிவித்தார்.
இன்று நடைபெற்ற பரம ஏழ்மைக்கு முற்றுப் புள்ளி வைப்பது தொடர்பான 2024 தேசிய ஆய்வரங்கில் உரையாற்றிய போது அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
நேர்மறையான பொருளாதார வளர்ச்சி, கட்டுப்பாட்டில் உள்ள பணவீக்கம், இப்பிராந்தியத்தில் மிகவும் சிறப்பான நிலையில் இருக்கும் பங்குச் சந்தை, ரிங்கிட்டின் மதிப்பு உயர்வு உள்ளிட்ட அம்சங்களை உள்ளடக்கிய பொருளாதார குறியீடு பெருமிதம் அளிக்கும் வகையில் உள்ளது.
பொருளாதாரத்தை கையாள்வதற்கு உரிய சிறப்பான தடத்தில் மலேசிய பயணிப்பதை இது காட்டுகிறது என்று அவர் சொன்னார்.