சமூக ஊடகங்களில் வறுத்தெடுக்கப்படுகிறார் நாகப்பஞ்சு

அக்டோபர் 12-

மலேசியாவில் தமிழ்ப்பள்ளிகளில் கொண்டாடப்பட்டு வரும் நவராத்திரி விழாவும், சரஸ்வதி பூஜையும் முற்றாக தடை செய்யப்பட வேண்டும் என்று கல்வி அமைச்சை கேட்டுக்கொண்டுள்ள மாந்தநேய திராவிடர் கழகத்தின் தலைவர் நாகப்பஞ்சு என்பவர் கடந்த இரண்டு தினங்களாக சமூக ஊடங்களிலும், பத்திரிகைகளிலும் வறுத்தெடுக்கப்பட்டு வருகிறார்.

நவராத்திரி விழா மற்றும் சரஸ்வதி பூஜை என்ற பெயரில் தமிழ்ப்பள்ளிகளில் நேரத்தை வீணடிக்கின்றனர். அவற்றை உடனடியாக தடை செய்ய வேண்டும் என்று அரசுக்கு கோரிக்கை விடுத்து இருக்கும் நாகப்பஞ்சு என்பவர் ஒரு வடிகட்டிய பகுத்தறிவற்றவர் என்று பலர் சாடி வருகின்றனர்.

இந்துக்களின் சமய விவகாரங்களில் அதற்குச்சற்றும் சம்பந்தம் இல்லாத நபர்கள், தலையிட வேண்டாம் என்று மஇகா தேசிய துணைத் தலைவர் டத்தோஸ்ரீ எம். சரவணன் கேட்டுக்கொண்டுள்ளார்.

நாகபஞ்சு போன்ற நபர்களுக்கு சமய நம்பிக்கையில்லை என்றால் அது அவர்களுடைய விருப்பம். ஆனால், மலேசியாவில் லட்சக்கணக்கான இந்துக்கள் வாழ்கிறார்கள். அவர்களின் சமய நம்பிக்கைக்கும், அதன் சம்பிராதயத்திற்கும் கொல்லி வைக்க வேண்டாம் என்று டத்தோஸ்ரீ சரவணன் கேட்டுக்கொண்டுள்ளார்.

தமிழ்ப்பள்ளிகளில் கலைமகள் வழிபாட்டை தடை செய்யக்கோருவது அவசியமற்றது என்று ஜெலுத்தோங் எம்.பி. RSN ராயர் கேட்டுக்கொண்டுள்ளார். மாந்த நேய இயக்கம் என்ற பெயரை வைத்துக்கொண்டு, இந்துக்களில் சமய சம்பிரதாய நடவடிக்கைகளுக்கு ஆணி அடிக்கும் வேலைகளை செய்ய வேண்டாம் என்று அந்த இயக்கத்தின் தலைவர் நாகபஞ்சுவை RSN ராயர் கேட்டுககொண்டுள்ளார்.

பகுத்தறிவு என்ற பெயரில் பக்குவப்படாத அறிவை கொண்டுள்ளவர்களின் சிறுபிள்ளைத்தனமாக கோரிக்கைக்கு அரசாங்கம் செவிசாய்க்கக்கூடாது என்று ஓம்ஸ் அறவாரியத்தின் தலைவர் ஓம்ஸ் தியாகராஜன் கேட்டுக்கொண்டுள்ளார்.

சிலர் செய்யும் கோமாளித்தனத்தால், இருப்பதையும் இழந்து விடுவோமோ என்று சிந்திக்கத்தோன்றுகிறது. தமிழ்ப்பள்ளிகள்தான் நமது அடையாளம். நாளைய தலைமுறைக்கு நாம் வைத்துவிட்டுப் போகும் வரலாறு நமது தமிழ்ப்பள்ளிகளாகும்.

அங்கே ஒழுக்க நெறிகளுக்கு இடமில்லாமல் இஷ்டத்திற்கு இருக்கலாம் என்பது, மாந்த நேய திராவிடர் கொள்கையாக இருக்குமானால் நமது மாணவர்கள் நிச்சயம் நன்னெறிமிக்கவர்களாக இருக்க மாட்டார்கள் என்று ஓம்ஸ தியாகராஜன் குறிப்பிட்டுள்ளார்.

WATCH OUR LATEST NEWS