கோலாலம்பூர், நவம்பர் 05-
வடக்கு தெற்கு நெடுஞ்சாலையில், சுங்கை பீசி டோல் சாவடியின் தடுப்பு சுவரை மோதிய எஸ்.யூ.வி. ரக வாகனம், சின்னாபின்னமானதில் இருவர் உயிரிழந்தனர்.
இச்சம்பவம் இன்று அதிகாலையில் நிகழ்ந்தது. வேகக்கட்டுப்பாட்டை இழந்து இருக்கலாம் என்று நம்பப்படும் எஸ்.யூ.வி. ரக ஹோண்டா சிஆர்- வி வாகனம், டோல் சாவடியின் வழித்தடத்திலிருந்து விலகி, அருகில் உள்ள வாகன தடுப்புச்சுவரை மோதியது.
இதில் வாகன இடிபாடுகளில் சிக்கிய இரண்டு ஆண்கள் கடும் காயங்களுக்கு ஆளாகி, சம்பவ இடத்லேயே மாண்டனர்.
இந்த விபத்து தொடர்பில் அதிகாலை 3.42 மணியளவில் தாங்கள் அவசர அழைப்பைப் பெற்றதாக சிலாங்கூர் மாநில தீயணைப்பு, மீட்புப்படை உதவி இயக்குநர் அகமட் முக்லிஸ் முக்தார் தெரிவித்தார்.
சம்பவ இடத்திற்கு விரைந்த ஸ்ரீ கெம்பாங்கான் தீயணைப்பு நிலையத்தைச் சேர்ந்த 7 வீரர்கள், 65 வயது மதிக்கத்தக்க அந்த இரு நபர்களின் உடல்களை மீட்பதற்கு பிரத்தியேக சாதனங்களை பயன்படுத்தியதாக அகமட் முக்லிஸ் குறிப்பிட்டார்.
விசாரணைக்கு ஏதுவாக இவ்விருவரின் சடலங்களும் போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டதாக அவர் மேலும் கூறினார்.