நாட்டின் முக்கிய முதலீட்டு நிறுவனமான 1MDB-யில் நிகழ்ந்த நிதி முறைகேடுகள் தொடர்பில் நாட்டு மக்களிடம் பகிரங்க மன்னிப்பு கோரியிருக்கும் முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜீப் துன் ரசாக்கின் மன்னிப்பை தாம் வரவேற்றது குறித்து கடுமையாக விமர்சனம் செய்து வரும் நபர்களை பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் சாடியுள்ளார்.
மற்ற ஊழல்வாதிகள் குறித்து தாம் மவுனம் காத்து வருவதாகவும், நஜீப்பின் மன்னிப்பை மட்டும் தாம் வரவேற்பதாகவும் கூறி, தம்மை கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றவர்கள், பாசாங்குத்தனமான பேர்வழிகள் என்று பிரதமர் வர்ணித்தார்.
கோடிக்கணக்கான ரிங்கிட்டை குவித்துக்கொண்ட முன்னாள் தலைவர்களும் உள்ளனர். ஊழலுக்கு எதிராக போராடி வருவதாக கூறிக்கொள்ளும் அவர்கள், தாங்கள் செய்த பாசாங்குத்தனத்திற்கு எந்தவொரு வருத்தமும் கொள்ளாமல், எதுவும் நடவாது போல் ஊமையாக உள்ளனர் என்று டத்தோஸ்ரீ அன்வார் குறிப்பிட்டார்.
நஜீப்பின் மன்னிப்பு, வரம்புக்கு உட்பட்டது என்பதை பிரதமர் ஒப்புக்கொண்டார். தம்முடைய செயலுக்காக மன்னிப்புக்கோரும் எவருடைய மன்னிப்பையும் வரவேற்பது மனித குணமாகும்.
நஜீப் பிரதமராகவும், நிதி அமைச்சராகவும் இருந்த போது பல பில்லியன் ரிங்கிட் சம்பந்தப்பட்ட 1MDB – ஊழல் நடந்து இருப்து உண்மையிலேயே வேதனை அளிக்கிறது என்று அன்வார் குறிப்பிட்டார்.