மலாக்கா, நவ.5-
மலாக்காவில் செயல்பட்டு வந்த போதைப்பொருள் கடத்தல் கும்பலை போலீசார் வெற்றிகரமாக முறியடித்துள்ளனர்.
கடந்த வாரம் வெள்ளிக்கிழமை இரண்டு இந்தோனேசியப் பெண்கள் உட்பட ஐந்து நபர்கள் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து 22 லட்சத்து 80 ஆயிரம் வெள்ளி மதிப்புள்ள போதைப்பொருள் கண்டு பிடிக்கப்பட்டதாக மலாக்கா மாநில போலீஸ் தலைவர் டத்தா ஸைனோல் சமா தெரிவித்தார்.
மலாக்கா ராயாவில் உள்ள ஒரு கொண்டோமினியம் அடுக்குமாடி வீடு மற்றும் ஜாலான் மெர்டேக்காவில் உள்ள ஒரு கட்டடம் ஆகிய இரு இடங்களில் அதிகாலை 3 மணியளவில் நடத்தப்பட்ட சோதனையில் அனைத்து சந்தேகப்பேர்வழிகளும் பிடிபட்டதாக அவர் குறிப்பிட்டார்.
மலாக்கா மாநில போதைப்பொருள் துடைத்தொழிப்பு பிரிவு போலீசாரால் மேற்கொள்ளப்பட்ட இந்த சோதனையில் மூன்று உள்ளூர் ஆடவர்கள் உட்பட ஐவரும் வளைத்துப்பிடிக்கப்பட்டனர்.
இந்த கடத்தல் கும்பல் முறியடிக்கப்பட்டது மூலம் கெத்தாமின், எரிமின் வகையை சேர்ந்த போதைப்பொருள், பெரியளவில் கைப்பற்றப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.