எம்.எச்.370 விமானத்தை தேடுவதற்கு மற்றொரு பரிந்துரை

கோலாலம்பூர், நவ.5-


பத்து ஆண்டுகளுக்கு முன்பு 239 பேருடன் மாயமான மலேசிய ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமான எம்.எச். 370 விமானத்தை ஒரு புதிய இடத்தில் தேடுவதற்கு யுனைடெட் கிங்டமில் உள்ள ஓசியன் இன்பினிட்டி நிறுவனம் பரிந்துரை செய்துள்ள திட்டத்தை போக்குவரத்து அமைச்சு பரிசீலனை செய்து வருவதாக அதன் அமைச்சர் அந்தோணி லோக் தெரிவித்துள்ளார்.

அந்த மலேசிய விமானத்தின் உடைந்த பாகங்கள், கடலடியில் கிடக்கின்றனவா? என்பதை கண்டறிவதற்கு சம்பந்தப்பட்ட நிறுவனம் ஒரு திட்டத்தை, போக்குவரத்து அமைச்சிடம் பரிந்துரைத்துள்ளதாக அந்தோணி லோக் குறிப்பிட்டார்.

இந்தியப் பெருங்கடலின் தென்பகுதியில் இன்னும் யாரும் ஊடுருவாத 15 ஆயிரம் சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் கடலடியில் தேடுதல் பணியில் ஈடுபடுவதற்கு அந்த நிறுவனம் முன்வந்துள்ளது.

விமானத்தை கண்டுப்பிடிக்க முடியவில்லை என்றால் எந்தவொரு கட்டணத்தையும் மலேசியா செலுத்த வேண்டிய அவசியமில்லை என்ற கொள்கையின் அடிப்படையில் இந்த தேடுதல் பணியைத் தொடங்குவதற்கு அந்த நிறுவனம் பரிந்துரை சமர்ப்பித்துள்ளதாக அந்தோணி லோக் குறிப்பிட்டுள்ளார்.

இன்று நாடாளுமன்ற மக்களவையில் கம்பார் எம்.பி. சோங் ஷெமின் Zhemin எழுப்பிய கேள்வி ஒன்றுக்கு பதில் அளிக்கையில் அந்தோணி லோக் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

WATCH OUR LATEST NEWS