கோலாலம்பூர், நவ. 5-
ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் குற்றஞ்சாட்டியிருப்பதைப் போன்று 94 மில்லியன் வெள்ளி ரொக்கப்பணம் கட்டுக்கட்டாக மீட்கப்பட்டதாக கூறப்படும் சம்பவத்தில் தாம் சம்பந்தப்பட்டுள்ளதாக கூறப்படுவதை முன்னாள் மனித வள அமைச்சர் வி.. சிவகுமார் வன்மையாக மறுத்துள்ளார்.
தமக்கு எதிராக கூறப்பட்டுள்ள இந்தக் குற்றச்சாட்டில் அடிப்படையில்லை என்பது மட்டுமல்ல, தனது நற்பெயரையும், நேர்மையையும், தாம் பிரதிநிதிக்கின்ற டி.ஏ.பி. கட்சியின் தோற்றத்திற்கு களங்கத்தை ஏற்படுத்தும் ஓர் அரசியல் தாக்குதலாகும் என்று பத்துகாஜா எம்.பி.யான சிவகுமார் வர்ணித்தார்.
அதேவேளையில் இந்த குற்றச்சாட்டு தொடர்பில் தமது பெயரை தெளிவாகக் குறிப்பிடப்படாவிட்டாலும் பெரிக்கத்தான் நேஷனலைச் சேர்ந்த பெண்டாங் எம்.பி. டத்தோ அவாங் ஹஷிமினால் கட்டவிழ்க்கப்பட்டுள்ள இந்த குற்றச்சாட்டு உண்மையிலேயே வருத்தம் அளிப்பதாக உள்ளது என்று சிவகுமார் விளக்கினார்.
பெண்டாங் எம்.பி.யின் கூற்று தமது மனதை புண்படுத்தியிருப்பதுடன், அவர் யாரைக் குறிப்பிட்டு சொல்கிறார் என்பது தமக்கு தெரியாது என்றும் இன்று நாடாளுமன்றக் கட்டடத்தில் உள்ள செய்தியாளர் மையத்தில் நடத்திய ஊடகவிலாளர்கள் சந்திப்பில் சிவகுமார் மேற்கண்ட விளக்கத்தை
அளித்துள்ளார்.
டி.ஏ.பி. முன்னாள் அமைச்சர் ஒருவரின் வீட்டிலிருந்து 94 மில்லியன் வெள்ளி ரொக்கப்பணம் மீட்ககப்பட்டதாக கூறப்படும் குற்றச்சாட்டைத் தொடர்ந்து டி.ஏ.பி. சார்பில் அமைச்சர் பொறுப்பை வகித்த ஒரு எம்.பி. என்ற முறையில் இதற்கு விளக்கம் அளிக்க வேண்டிய பொறுப்பு தமக்கு இருப்பதாகவும் சிவகுமார் குறிப்பிட்டார்.
இந்த செய்தியாளர்கள் கூட்டத்தில் சிவகுமாருக்கு ஆதரவாக டி.ஏ.பி. தலைவரும், பகான் எம்.பி.யுமான லிம் குவான் எங், ஜெலுத்தோங் எம்.பி. ஆர்.எஸ்.என். ராயர், புக்கிட் குளுகோர் எம்.பி. ராம் கர்ப்பால் சிங், புக்கிட் பெண்டேரா எம்.பி. ஸ்யெர்லீனா அப்துல் ரஷிட், கோத்தா மலாக்கா எம.பி. கூ போய் தியோங்
மற்றும் இன்னும் சிலர் கலந்து கொண்டனர்.