பினாங்கு, நவ.7-
தனது காதலை நிராகரித்து விட்டார் என்பதற்காக ஒரு பெண்ணையும், அவரின் தந்தையையும் கத்தியால் குத்தி கொலை செய்த ஆடவர் ஒருவரின் வெறித்தனமான செயல், இன்று வியாழக்கிழமை மதியம் ஒரு மணியளவில் பினாங்கு, ஆயர் ஹீத்தாமை உலுக்கியது.
பிற்பகல் 1.15 மணியளவில் நிகழ்ந்த இச்சம்பவத்தில் ஆவேசமாக காணப்பட்ட 32 வயதுடைய அந்த ஆடவர், சம்பந்தப்பட்ட பெண்ணையும், அவரின் தந்தையையும் கத்தியால் குத்தி கொலை செய்தப் பின்னர் தன்னையும் கத்தியால் காயப்படுத்திக்கொண்டார்.
இந்த சம்பவம் பினாங்கு ஆயர் ஹீத்தாம், லெங்கோக் ஆங்சானாவில் உள்ள ஒரு அடுக்குமாடி வீட்டில் நிகழ்ந்தது.
இந்த இரட்டைக் கொலைகள் நடந்த இடத்தில் போலீசார் இன்னமும் தடயவியல் சோதனையில் ஈடுபட்டு வருவதால் மேல்விவரங்கள் எதுவும் கிடைக்கவில்லை.
எனினும் சம்பவம் நிகழ்வதற்கு முன்னதாக 30 வயது மதிக்கத்தக்க அந்தப் பெண், வேலை இடத்திலிருந்து அப்போதுதான் தாம் தங்கியிருக்கும் வீடமைப்புப்பகுதியை வந்தடைந்ததாக கூறப்படுகிறது.
லிப்டை நோக்கி அந்தப் பெண் சென்று கொண்டிருந்த போது, அங்கே ஏற்கனவே காத்திருந்த 32 வயது ஆடவர், அந்தப் பெண்ணை மடக்கி காதலை நிராகரித்தற்கான காரணத்தை கேட்டு, ஆவேசமாக நடந்து கொண்டதாக கூறப்படுகிறது. அப்போது இருவருக்கும் இடையில் கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
அடுக்குமாடி வீட்டின் கீழ் தளத்தில் பலத்த சத்தம் கேட்பதை உணர்ந்த அந்தப் பெண்ணின் தந்தை கீழ் தளத்திற்கு ஓடி வந்து, தனது மகளுக்கும் அந்த ஆடவருக்கும் இடையில் நிகழ்ந்த தகராற்றை தடுத்து நிறுத்த முற்பட்டுள்ளார்.
இதனால் ஆவேசம் அடைந்த அந்த ஆடவர், சற்றும் எதிர்பாராத நிலையில் சம்பந்தப்பட்ட பெண்ணையும், அவரின் 62 வயது தந்தையும் கத்தியால் குத்தி சாய்த்ததாக நம்பப்படுகிறது.
பின்னர் அந்த ஆடவர் தன்னை காயப்படுத்திக்கொண்டார். கடும் காயங்களுக்கு ஆளான அந்த நபர், மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.