கோலாலம்பூர், டிச. 19-
கிளந்தானில் ஏற்பட்ட வெள்ளப் பேரிடரில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் பொருட்டு மலேசிய கூட்டுறவு ஆணையமான எஸ்.கே.எம். மூலமாக அந்த மாநில மக்களுக்கு உதவிப்பொருட்களை அனுப்பிவைக்கும் நிகழ்வை தொழில்முனைவோர், கூட்டுறவு மேம்பாட்டுத்துறை துணை அமைச்சர் டத்தோஸ்ரீ ஆர். ரமணன் இன்று அதிகாரப்பூர்வமாக தொடக்கி வைத்தார்.
Skuad Ihsan MADANI SKM Prihatin dan Gerakan Koperasi எனும் மலேசிய கூட்டுறவு ஆணையத்தின் பரிவுமிகுந்த கூட்டுறவு நடவடிக்கைக்கான மடானி பணிப்படையின் மூலம் 14 Four Wheel வாகனங்கள் மற்றும் ஒரு லோரியுடன் உதவிப்பொருட்கள் அனுப்பிவைக்கப்பட்ட இந்த நிகழ்வு, இன்று காலை 10.30 மணியளவில் கோலாலம்பூர், மலேசிய கூட்டுறவு ஆணையக் கட்டடத்தில் டத்தோஸ்ரீ ரமணன் தலைமையில் நடைபெற்றது.

ஒவ்வொரு நாடாளுமன்றத் தொகுதிக்கும் ஒரு வாகனம் வீதம் கிளந்தானில் உள்ள 14 நாடாளுமன்றத் தொகுதிகளிலும் 14 வாகனங்கள் மூலம் உதவிப்பொருட்கள் அனுப்பிவைக்கப்பட்டன.
இந்த பரிவுமிகுந்த உதவித் திட்டத்திற்காக மலேசிய கூட்டுறவு ஆணையம் 5 லட்சம் ரிங்கிட்டை ஒதுக்கியுள்ளது. இந்த உதவியானது வெறுமனே செய்யக்கூடிய உதவி அல்ல. மாறாக, மக்களின் நலனுக்கான அரசாங்கம் கொண்டுள்ள அர்ப்பணிப்பையும், கடப்பாட்டையும் காட்டுகிறது என்று இந்த நிகழ்வை தொடக்கி வைத்து உரையாற்றுகையில் டத்தோஸ்ரீ ரமணன் மேற்கண்டவாறு கூறினார்.

வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்கள், தங்கள் வீடுகளை சுத்தம் செய்வதற்குரிய உபகரணங்கள் மற்றும் உணவுக்கூடைகளை இந்த உதவிப்பொருட்கள் உள்ளடக்கியிருப்பதாக டத்தோஸ்ரீ ரமணன் குறிப்பிட்டார்.
இந்த உதவிப்பொருட்கள் யாவும், வெள்ளத்தால் பாதிக்கப்ட்ட மக்களின் சிரமத்தை ஓரளவு குறைப்பதற்கான ஓர் உன்னத நோக்கத்தைக் கொண்டது என்பதையும் துணை அமைச்சர் தெளிவுபடுத்தினார்.
வெள்ளத்திற்குப் பிறகு மக்கள் தங்களின் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பும்போது ஏற்படக்கூடிய சிரமங்களை குறைப்பதற்கு இந்த உதவிப்பொருட்கள் யாவும், கிட்டத்தட்ட 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்களை சென்றடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதுபோன்று இயற்கை சீற்றங்களில் பாதிக்கப்படும் மக்களுக்கு மனிதாபிமான உதவிகளை வழங்குவதில் மலேசிய கூட்டுறவு ஆணையத்தின் மூலமாக தொழில்முனைவோர், கூட்டுறவு மேம்பாட்டு அமைச்சு எப்போதுமே உறுதியுடன் துணை நிற்கும் என்றும் டத்தோஸ்ரீ ரமணன் தமது உரையில் தெரிவித்தார்.
இந்நிகழ்வில் தொழில்முனைவோர், கூட்டுறவு மேம்பாட்டு அமைச்சின் தலைமைச் செயலாளர் டத்தோஸ்ரீ கைருல் டிசாய்மி டாவுட், தொழில்முனைவோர் மேம்பாட்டுப்பிரிவின் துணை தலைமைச் செயலாளர் டத்தோ ஹாஜி ஜம்ரி சல்லே லெப்டிணட் ஜெனரல் டத்தோ அகமட் அகமட் நோரிஹான் ஜலாய் மற்றும் அக்கூட்டுறவுக்கழகத்தின் தலைமை செயல்முறை அதிகாரி டத்தோ ருஸ்லி ஜப்பார் ஆகியோர் கலந்து கொண்டனர்.