சட்டவிரோதப் பணமாற்றம்: 12 குற்றச்சாட்டுகளிலிருந்து ரோஸ்மா மன்சோர் விடுதலை

கோலாலம்பூர், டிச. 19-


சட்டவிரோதப் பண மாற்றம் மற்றும் வருமான வரி வாரியத்திடம் தனது வருமான விபரங்களை அறிவிக்காதது தொடர்பில் 12 குற்றச்சாட்டுக்களை எதிர்நோக்கியிருந்த முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜீப் துன் ரசாக்கின் துணைவியார் டத்தின்ஸ்ரீ ரோஸ்மா மன்சோர், கோலாலம்பூர் உயர் நீதிமன்றத்தில் இன்று அனைத்து குற்றச்சாட்டுகளிலிருந்தும் விடுதலை செய்யப்பட்டார்.

மொத்தம் 7 மில்லியன் ரிங்கிட் சம்பந்தப்படட் 12 குற்றச்சாட்டுகளையும் ரத்து செய்யக் கோரி, ரோஸ்மா மன்சோர் செய்து கொண்ட விண்ணப்பத்திற்கு அனுமதி அளிக்கப்பட்டதைத் தொடர்ந்து ரோஸ்மாவை அனைத்து குற்றச்சாட்டுகளிலிருந்தும் விடுவிப்பதாக உயர் நீதிமன்ற நீதிபதி கே. முனியாண்டி தமது தீர்ப்பில் தெரிவித்தார்.

தனக்கு எதிராக பிராசிகியூஷன் தரப்பினர் கொண்டு வந்த 12 குற்றச்சாட்டுகளும் அடிப்படையற்றது என்றும், குற்றச்சாட்டிற்கான அடிப்படைத் தன்மைகள் விளக்கப்படவில்லை என்றும் கூறி, அக்குற்றச்சாட்டுகளை ரத்து செய்யக்கோரி ,73 வயது ரோஸ்மா மன்சோர், உயர் நீதிமன்றத்தில் விண்ணப்பம் செய்தார்.

இவ்வழக்கை செவிமடுத்த உயர் நீதிமன்ற நீதிபதி கே. முனியாண்டி, ரோஸ்மாவின் வாதத்தில் அடிப்படை இருப்பதாக தமது தீர்ப்பில் தெரிவித்தார்.

குறிப்பாக, ரோஸ்மா சட்டவிரோதப் பண மாற்றத்தில் சம்பந்தப்பட்டுள்ளார் என்றால் அந்த குற்றச்சாட்டில் முக்கிய அம்சமான பணமாற்றம் நடந்த முறை, எப்போது நடைபெற்றது முதலிய தெளிவுகள் குற்றச்சாட்டில் மிகத் துல்லியமாக இல்லை. அ தேவேளையில் ஒரு குற்றச்சாட்டிற்கும் மற்றொரு குற்றச்சாட்டிற்கும் இடையிலான குற்ற அம்சங்கள், ஒரே தன்மையில் இருப்பது ஏன் என்பது குறித்தும் விளக்கப்பட வில்லை.

எனவே மேற்கண்ட வாதங்களை முன்வைத்து, ரோஸ்மா எழுப்பிய கேள்விகளில் அடிப்படை இருப்பதை தாம் ஏற்றுக்கொள்வதாக நீதிபதி முனியாண்டி தமது தீர்ப்பில் தெரிவித்தார்.

இதனிடைய அனைத்து குற்றச்சாட்டுகளிலிருந்தும் தாம் விடுதலை செய்யப்பட்டு இருப்பது, தமது பிறந்த நாளுக்கு கிடைத்த ஓர் அர்த்தம் பொதித்த பரிசாகும் என்று ரோஸ்மா மன்சோர் வர்ணித்துள்ளார்.

WATCH OUR LATEST NEWS