சமூக ஊடகங்களை பயன்படுத்துவதற்கு வயது வரம்பு இல்லை

கோலாலம்பூர், டிச.19-


மலேசியாவில் சமூக ஊடகங்கள் பயன்பாட்டிற்கு வயது வரம்பு நிர்ணயிப்பதற்கான திட்டம் எதனையும் இன்னும் அரசாங்கம் கொண்டிருக்கவில்லை என்று தொடர்புத்துறை அமைச்சர் ஃபாஹ்மி ஃபாட்ஸில் தெரிவித்தார்.

சமூக ஊடகங்களை பயன்படுத்துகின்றவர்களுக்கு வயது வரம்பு நிர்ணயிக்கப்பட வேண்டும் என்று பல்வேறு தரப்பினர் பரிந்துரைகளையும், ஆலோசனைகளையும் முன்வைத்த போதிலும் அந்த உத்தேசத் திட்டத்திற்கான அவசியம் இருப்பதாக அரசாங்கம் அறியமுடியவில்லை என்று அரசாங்கப் பேச்சாளரான ஃபாஹ்மி ஃபாட்ஸில் குறிப்பிட்டார்.

எனினும் சமூக ஊடகங்களில் கணக்கை திறப்பதற்கான வயது வரம்பிற்கு ஒவ்வொரு சமூக ஊடக நிறுவனமும் நிர்ணயித்துள்ள விதிமுறைகளை அமைச்சு அணுக்கமாக கண்காணித்து வரும் என்று அவர் குறிப்பிட்டார்.

வயது வரம்பு குறித்து குறிப்பிட்ட சட்டங்களைக்கொண்டு வருவதன் மூலம் ஆஸ்திரேலியா உட்பட சில நாடுகளின் அடிச்சுவடுகளைப் பின்பற்றும் எண்ணத்தை தற்போது அரசாங்கம் கொண்டிருக்கல்லை என்பதையும் ஃபாஹ்மி ஃபாட்ஸில் விளக்கினார்.

சமூக ஊடகங்களை சிறார்கள் முதல் பதின்ம வயதுடைய இளையோர்கள் தவறாக பயன்படுத்தப்படுவதை கட்டுபடுத்தும் வகையில் ஆஸ்திரேலியா போன்ற நாடுகளில் 16 வயதுக்கு மேற்பட்டவர்கள் மட்டுமே சமூக ஊடகங்கள் பயன்படுத்தப்படுவதற்கு வயது வரம்பு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

சமூக ஊடக சேவை நிறுவனங்கள் தங்கள் தளங்களில் கணக்கு வைத்திருப்பவர்கள், குறைந்தபட்சம் 13 வயது அல்லது அதற்கு மேற்பட்டவர்களாக இருக்க வேண்டும் என்று வயது வரம்பை நிர்ணயித்து இருப்பதையும் ஃபாஹ்மி ஃபாட்ஸில் சுட்டிக்காட்டினார்.

அதேவேளையில் வரும் ஜனவரி முதல் தேதியிலிருந்து சமூக ஊடக சேவை நிறுவனங்களுக்கு மலேசிய தொடர்புத்துறை மற்றும் பல்லூடக ஆணையம் கூடுதல் கட்டுப்பாடுகளை விதிக்கவிருப்பதையும் அவர் விளக்கினார்.

WATCH OUR LATEST NEWS