கோலாலம்பூர், டிச. 19-
சபா மாநில முன்னாள் முதலமைச்சரும், முன்னாள் அம்னோ தொடர்புக்குழுத் தலைவருமான மூசா அமான், சபா மாநிலத்தின் ஆளுநராக நியமிக்கப்பட்டது, சமூக வலைத்தளங்களில் சர்ச்சைக்கு இடமாக மாறி வருகிறது.
மூசா அமானின் சர்ச்சைக்கு இடமான விவகாரங்கள் குறித்து பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமும், பக்காத்தான் ஹராப்பான் தலைவர்களும் கடந்த காலங்களில் கூறிய விமர்சனங்களை நினைவுகூர்ந்து, சமூக வலைத்தளங்களில் விவாதங்கள் தூண்டி விடப்பட்டுள்ளன.
சபாவில் வெட்டுமர ஒப்பந்தங்கள் தொடர்பான கிரிமினல் குற்றச்சாட்டுகளிலிருந்து கடந்த 2020 ஆம் ஆண்டு மூசா அமான் உயர் நீதிமன்றத்தினால் விடுவிக்கப்பட்ட போது அது குறித்து தமது அதிர்ச்சியை வெளிப்படுத்திய டத்தோஸ்ரீ அன்வாரின் அந்த காணொளியின் உள்ளடக்கம் சமூக வலைத்தளங்களில் பரவலாக பகிரப்பட்டு வருகிறது.
சபாவில் வெட்டுமர ஒப்பந்ததில் 6 கோடியே 32 லட்சத்து 93 ஆயிரத்து 924 அமெரிக்க டாலரை அல்லது 28 கோடி ரிங்கிட்டை லஞ்சமாக பெற்றதாக 46 லஞ்ச ஊழல் குற்றச்சாட்டுகளிலிருந்து மூசா அமான் விடுதலை செய்தது குறித்து டத்தோஸ்ரீ அன்வார் உட்பட பக்கத்தான் ஹராப்பான் தலைவர்கள் தங்கள் அதிர்ச்சையை தெரிவித்ததாக கூறப்படுகிறது..
அதேவேளையில் சில ஆயிரம் வெள்ளியை திருடிய ஏழை மக்களுக்கு சிறைத் தண்டனையும், கோடிக்கணக்கான வெள்ளியை சூறையாடிவர்கள், விடுவிக்கப்படுவதும் குறித்து அன்வார் கேள்வி எழுப்பியிருந்தார்.
மேலும் அன்றைய அரசாங்கத்தின் இரட்டை நிலைப்பாட்டை கேள்வி எழுப்பி, டத்தோஸ்ரீ அன்வார் பேசிய அந்த உரையாடல் தற்போது, சமூக வலைத்தளங்களில் மீண்டும் பதிவேற்றம் செய்யப்பட்டு விமர்சிக்கப்பட்டு வருவது, மூசா அமானின் தற்போதைய நியமனத்தை சர்ச்சையாக்கி வருவதாக கூறப்படுகிறது.