டிச. 22-
பினாங்கு இந்து அறக்கட்டளை வாரியத்தின் நிர்வாகத்திற்கு எதிராக சுமார் 150 பேர் போராட்டம் நடத்திய விவகாரத்தைத் தொடர்ந்து வாரியத்தின் மீதான ஊழல் தடுப்பு ஆணையத்தின் விசாரணையிலிருந்து கவனத்தைத் திசை திருப்ப வேண்டாம் என்று அதன் துணைத் தலைவர் Senator Dr A Lingeshwaran போராட்டக்காரர்களைக் கேட்டுக்கொண்டார். வாரியம் சரியான பாதையில் செல்கிறது என்றும், முன்பு தங்களுக்குள் சண்டையிட்டுக் கொண்டிருந்தவர்கள் இப்போது அனுதாபம் தேடுகிறார்கள் என்றும் அவர் கூறினார்.
போராட்டக்காரர்கள் வாரியத்தின் தலைவர் ஆர்எஸ்என் ராயரின் நியமனம் குறித்தும் லிம் குவான் எங் கின் செல்வாக்கு குறித்தும், லிங்கேஸ்வரனின் துணைத் தலைவர் நியமனம் குறித்தும் கேள்விகள் எழுப்பினர். அந்த நியமனம் யாவும் பினாங்கு முதலமைச்சரின் ஆலோசனையின் பேரில் ஆளுநரால் செய்யப்பட்டது என்று லிங்கேஸ்வரன் பதிலளித்தார்.
வாரியத்தின் 15 ஆண்டு காலம் முடிந்துவிட்டது என்றும், புதிய தலைமுறை பொறுப்பேற்க வேண்டிய நேரம் இது என்றும் லிங்கேஸ்வரன் வாரியத்தின் முன்னாள் தலைவர் ராமசாமியை குறிப்பிட்டார். தனது செயலவை சுத்தமாகவும், பொறுப்புடனும் வெளிப்படைத்தன்மையுடனும் உள்ளது என்றும், நிதியை தவறாக பயன்படுத்தியதற்கான ஆதாரம் இருந்தால் பதவி விலகத் தயாராக இருப்பதாகவும் அவர் கூறினார்.
ஒப்பந்தங்கள் உட்குழுக்கள் மூலம் பரிசோதிக்கப்படுகின்றன என்றும், குடும்ப உறுப்பினர்களுக்கு நேரடியாக வழங்கப்படுவதில்லை என்றும் லிங்கேஸ்வரன் கூறினார். இதுவரை சுமார் 1000 மாணவர்களுக்கு ஒரு மில்லியன் ரிங்கிட் கல்வி உதவி நிதி வழங்கப்பட்டுள்ளது. அரசியல் சார்பு இல்லாமல் மக்களுக்கு சிறுநீரக சுத்திகரிப்பு சேவையும் வாரியம் வழங்குகிறது என்றார் அவர்.