தமிழ்ப்பள்ளிகளின் வசதிகள் மேம்படுத்தப்பட பினாங்கு மாநில அரசு நிதியுதவி

டிச. 22-

பினாங்கில் உள்ள தமிழ்ப்பள்ளிகளின் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவதற்காக ஆண்டுக்கு 70,000 ரிங்கிட் முதல் 80,000 ரிங்கிட் வரை நிதி ஒதுக்கீடு வழங்கப்படும் என்று முதலமைச்சர் Chow Kon Yeow அறிவித்துள்ளார். இந்த நிதி ஒதுக்கீடு போதுமானதாக இல்லாவிட்டாலும், எதிர்காலத்தில் அதிகரிக்கப்படும் என்றும் அவர் உறுதியளித்தார்.

பினாங்கு மாநில அரசு 2023 முதல் தமிழ்ப்பள்ளிகள், மழலையர் பள்ளிகள், பஞ்சாபி பள்ளிகள், இதர அமைப்புகள் ஆகியவற்றுக்கு ஆண்டுதோறும் 2.39 மில்லியன் ரிங்கிட் சிறப்பு நிதி உதவி வழங்கி வருகிறது. தமிழ் மொழியின் முக்கியத்துவத்தையும், அதன் பாரம்பரியத்தையும் பாதுகாக்கும் வகையில் ஆசிரியர்களின் பங்கை வலுப்படுத்த வேண்டியதன் அவசியத்தையும் முதலமைச்சர் வலியுறுத்தினார்.

பினாங்கில் நடைபெற்ற தமிழ் மொழி ஆசிரியர் மாநாட்டில், பாடத்திட்டத்தை மேம்படுத்துதல், மொழியின் மீது ஆர்வத்தை வளர்த்தல் , நவீன சமூகத்தில் மொழியின் முக்கியத்துவத்தை நிலைநிறுத்துதல் போன்ற விவகாரங்கள் விவாதிக்கப்பட்டன. இந்த மாநாடு ஆசிரியர்களுக்குப் புதிய கற்பித்தல் முறைகளை அறிமுகப்படுத்தும் நோக்கில் நடைபெற்றது.

இந்த மாநாட்டில் 500க்கும் மேற்பட்ட தற்கால ஆசிரியர்களும் வருங்கால ஆசிரியர்களும் கலந்துகொண்டனர். சிங்கப்பூர், மொரிஷியஸ் உள்ளிட்ட வெளிநாடுகளில் இருந்தும் பங்கேற்பாளர்கள்இணையம் மூலம் கலந்து கொண்டனர். மேலும், கல்வி ஆய்வுக் கட்டுரைகள் சமர்ப்பிக்கப்பட்டதுடன், புத்தாக்கக் கண்டுபிடிப்பு போட்டிகளும் நடத்தப்பட்டன.

WATCH OUR LATEST NEWS