ரெம்பாவ், டிச. 23-
இன்சுரன்ஸ் பணத்தை இழப்பீடாக கோருவதற்காக தனது விலை உயர்ந்த ஆடம்பரக் கார், கொள்ளைச் சம்பவத்தின் போது களவாடப்பட்டு விட்டதாக பொய்யான தகவலைகூறி, நாடகமாடிய பொறியியலாளர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
அந்த நபர் அளித்த போலீஸ் புகாரில் பல்வேறு முரண்பாடுகள் இருப்பதை சந்தேகித்த போலீசார், அந்த நபரை துருவி, துருவி விசாரணை செய்த போது,அவர் அளித்த தகவல்களில் முன்னுக்குப்பின் முரண்பாடுகள் இருப்பது கண்டு பிடிக்கப்பட்டன.
இதனைத் தொடர்ந்து 42 வயதுடைய அந்த நபர், கைது செய்யப்பட்டுள்ளதாக நெகிரி செம்பிலான், ரெம்பாவ் மாவட்ட போலீஸ் தலைவர் ஷேக் கடார் ஷேக் முகமட் தெரிவித்தார்.
கடந்த வெள்ளிக்கிழமை இரவு 10.22 மணியளவில் தம்மை மடக்கிய அடையாளம் தெரியாத நபர்கள், தம்முடைய உடமைகளையும், தமக்கு சொந்தான ஆவ்டி ரக காரையும் கொள்ளையடித்துக்கொண்டு தப்பிச் சென்று விட்டதாக அந்த நபர், கடந்த சனிக்கிழமை அதிகாலை 3.14 மணியளவில் போலீசில் புகார் செய்ததாக அவர் குறிப்பிட்டார்.
தாங்கள் மேற்கொண்ட விசாரணையில் இன்சுரன்ஸ் பணத்தை கோருவதற்காக அவர் இந்த பித்தலாட்டத்தை நடத்தியுள்ளார் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது என்று ஷேக் கடார் தெரிவித்துள்ளார்.