சிலாங்கூர் சுற்றுலா ஆண்டு :80 லட்சம் சுற்றுப்பயணிகளை கவரும்

ஷாஆலாம், டிச. 23-


2025 ஆம் ஆண்டு சிலாங்கூர் மாநிலத்திற்கு வருகை புரியும் ஆண்டு தொடங்கப்பட்டுள்ளது. 80 லட்சம் சுற்றுப்பயணிகளை கவரும் நோக்கில் சிலாங்கூர் மாநிலத்தின் அதிகாரப்பூர்வ சுற்றுலா ஊக்குவிப்பு நிறுவனமான டூரிசம் சிலாங்கூர், இந்த சுற்றுலா ஆண்டை முன்னெடுத்துள்ளது.

சிலாங்கூர்தான் இருக்கே……………என்ற கருப்பொருளைத் தாங்கிய இந்த சுற்றலா ஆண்டை சிலாங்கூர் மந்திரி பெசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி அதிகாரப்பூர்வமாக தொடக்கி வைத்தார்.

ஷா ஆலாம், செத்தியா சிட்டி பார்க்கில் தொடக்கி வைக்கப்பட்ட சிலாங்கூர் மாநில 2025 ஆம் ஆண்டுக்கான சுற்றுலா ஆண்டை முன்னிட்டு கடந்த டிசம்பர் 20 ஆம் தேதியிலிருந்து இன்று டிசம்பர் 23 ஆம் தேதி திங்கட்கிழமை வரையில் வண்ண மயமான பல்வேறு சிறப்பு நிகழ்வுகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

பல்வேறு அழகிய சுற்றுலாத் தலங்களை தன்னகத்தே கொண்டுள்ள சிலாங்கூர் மாநிலத்தின் சுற்றுலா ஆண்டையொட்டிய இந்த சிறப்பு நிகழ்வுகளில் கடந்த மூன்று தினங்களில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வருகை புரிந்தனர்.

சிலாங்கூர் மாநிலத்தில் வீற்றிருக்கும் பார்க்க வேண்டிய சுற்றுலாத் தலங்கள் குறித்து அறிமுக நிகழ்வாக பல்வேறு கூடாரங்கள் அமைக்கப்பட்டு, சுற்றுலாத் தலங்கள் குறித்து ஊக்குவிக்கப்பட்டு வருகின்றன.

சுற்றுலா ஆண்டை முன்னெடுத்துள்ள டூரிசம் சிலாங்கூர் நிறுவனத்திற்கு பக்கபலமாக சுற்றுலா வியூக சகாக்களாக CUCKKOO, ANBOT Store, ஷா ஆலாம் மாநகர் மன்றம் மற்றும் Courtyard by Marriott Shah Alam ஆகியவை விளங்குகின்றன.

WATCH OUR LATEST NEWS