டிரெய்லர் லோரியின் சக்கரம் கழன்றதே விபத்திற்கான காரணமாகும்

கோலாலம்பூர், டிச. 24-


மலாக்கா அலோர்காஜாவில் நேற்றிரவு நிகழ்ந்த கோர சாலை விபத்தில் எழுவர் மாண்டதற்கு, டிரெய்லர் லோரி ஒன்றின் சக்கரம் கழன்றதே முக்கிய காரணமாகும் என்று கண்டறியப்பட்டுள்ளது.

31 வயது ஓட்டுநர் செலுத்திய அந்த டிரெய்லர் லோரி, நெடுஞ்சாலையின் நடுவே சென்று கொண்டிருந்த போது திடீரென்று லோரியின் முன்புற வலது சக்கரம் கழன்று விட்டதாக பூர்வாங்க விசாரணையில் தெரியவந்துள்ளது என்று அலோர் காஜா மாவட்ட போலீஸ் தலைவர் அஸாரி அபு சமா தெரிவித்தார்.

சாலையில் மூன்றாவது தடத்தில் 27 பயணிகளுடன் சென்று கொண்டிருந்த சுற்றுலா பேருந்து, கழன்று ஓடிய அந்த சக்கரத்தின் மீது மோதி, வேகக்கட்டுப்பாட்டை இழந்து, எதிர்திசை தடத்தில் நுழைந்து எம்.பி.வி. வாகனம் உட்பட இதர வாகனங்களை மோதி தடம்புரண்டதாக அஸாரி அபு சமா குறிப்பிட்டார்.

இதில் எம்.வி. வாகனத்தில் ஐவரும், பேருந்தில் இருவரும் மாண்டதாக அவர் குறிப்பிட்டார்.

எம்.பி.வி. வாகனத்தில் பயணம் செய்த 32 வயது கையிருல் இக்வான் மாசுப்பி, அவரின் 32 வயது மனைவி பாடஸிலின்னா ரம்லி, அவரின் 66 வயது தந்தை ரம்லி அ அப்துல் வஹாப், அவரின் துணைவியார், 2 வயது கைக்குழந்தை முகமட் ஒமார் , 56 வயது பேருந்து ஓட்டுநர் நுர்சினியன் காமிட் மற்றும் இன்னும் அடையாளம் காணப்படாத ஓர் பேருந்து பயணி ஆகியோர் இதில் மாண்டதாக அஸாரி அபு சமா அடையாளம் கூறினார்.

WATCH OUR LATEST NEWS