அலோர்காஜா, டிச. 24-
வடக்கு தெற்கு நெடுஞ்சாலையில் 204 ஆவது கிலோமீட்டரில் மலாக்கா, அலோர் காஜாவில் 5 வாகனங்கள் சம்பந்தப்பட்ட கோர விபத்தில் ஓர் ஆண் குழந்தை உட்பட எழுவர் மாண்டனர். மேலும் 33 பேர் காயங்களுக்கு ஆளானதாக தெரிவிக்கப்பட்டது.
இத்துயரச்சம்பவம் நேற்று இரவு 8.30 மணியளவில் நிகழ்ந்தது. ஒரு சுற்றுலா பேருந்து, துணிமூட்டைகளை ஏற்றி வந்த ஒரு டிரெய்லர் லோரி, டோயோட்டா எஸ்திமா ரக எம்.பி.வி. வாகனம் ஆகியவை இந்த விபத்தில் சிக்கிய ஐந்து வாகனங்களில் அடங்கும்.
இவ்விபத்தில் எம்.பி.வி. வாகனத்தில் பயணம் செய்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த எண்மரில் ஐவர் உயிரிழந்தனர்.இரண்டு பெண்கள், இரண்டு ஆண்கள் மற்றும் ஒரு கைக்குழந்தை ஆகியோர் சம்பவ இடத்தி லேயே மாண்டனர். அக்குடும்பத்தைச் சேர்ந்த இதர மூவர் கடும் காயங்களுக்கு ஆளாகினர்.
உயிரிழந்தவர்களில் மேலும் இருவர் சுற்றுலா பேருந்தில் பயணம் செய்த ஒரு பெண்ணும், அந்த பேருந்தை செலுத்திய ஓட்டுநரும் ஆவர். இந்த விபத்தில் மொத்தம் 40 பேர் சம்ந்தப்பட்டுள்ள வேளையில் அவர்களின் எழுவர் உயிரிழந்தனர் என்று தீயணைப்பு, மீட்புப்படையின் இயக்குநர் முகமட் பிஸார் அஸிஸ் தெரிவித்தார்.
அந்த பேருந்து தெற்கை நோக்கி சென்று கொண்டு இருந்த போது .இவ்விபத்து நிகழ்ந்தது. காயமுற்ற 33 பேர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். 17 பேர் மலாக்கா மருத்துவமனையிலும், பத்து பேர் அலோர் காஜா மருத்துவமனையிலும், இதர அறுவர் பந்தாய் மருத்துவமனையிலும் சேர்க்கப்பட்டுள்ளனர். உயிரிழந்த எழுவரின் உடல்கள் மலாக்கா மருத்துவமனையின் சவக்கிடங்கிற்கு கொண்டு செல்லப்பட்டன.
இடிபாடுகளுக்கு இடையில் சிக்கிய எழுவரின் உடல்களை மீட்பதற்கு மீட்புப்படையினர் சுமார் நான்கு மணி நேரம் போராடியதாக அவர் குறிப்பிட்டார்.
இவ்விபத்தில் எம்.பி.வி. வாகனம் சின்னாபின்னமான வேளையில் டிரெய்லர் லோரி ஏற்றி வந்த துணி மூட்டைகள் நெடுஞ்சாலையிலா நாலா புறமும் சிதறிக்கிடந்தன. இதனால், வடக்கு தெற்கு நெடுஞ்சாலையில் நேற்றிரவு கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.