கோலாலம்பூர், டிச.24-
வங்கிகளில் ATM இயந்திரத்தில் பணம் எடுப்பதற்கு விதிக்கப்படும் ஒரு ரிங்கிட் சேவைக்கட்டணத்தை அரசாங்ஙகம் அகற்ற வேண்டும் என்று கோரி நாடு தழுவிய நிலையில் பத்து லட்சம் பேரிடம் கையெழுத்து வாங்கும் வேட்டையை தேசிய வங்கி ஊழியர்கள் தொழிற்சங்கமான என்.யூ.பி.இ. தொடங்கியுள்ளது.
தானியங்கி பட்டுவாடா இயந்திரத்தில் சேவைக்கட்டணமாக ஒரு ரிங்கிட் கட்டணம் விதிக்கப்படுவது சாமானிய மக்களை வெகுவாக பாதிக்கச் செய்கிறது. இந்த கட்டண முறை,முற்றாக துடைத்தொழிக்கப்பட வேண்டும் என்று என்.யூ.பி.இ. யின் பொதுச் செயலாளர் ஜே.சோலமன் வலியுறுத்தியுள்ளார்.
மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக என்.யூ.பி.இ. முன்னெடுத்துள்ள பிரச்சாரங்களில் இந்த ஒரு ரிங்கிட் கட்டண முறையை அகற்றுவதும் அடங்கும். இதற்கு பொது மக்களின் ஆதரவை பெறுவதற்கு பத்து லட்சம் கையெழுத்துக்களை இலக்காக கொண்டு இந்த கையெழுத்து வேட்டை தொடங்கப்பட்டுள்ளதாக சோலமன் விளக்கினார்.