கோலாலம்பூர், டிச. 24-
மலாக்கா, அலோர் காஜாவில் எழுவர் உயிரிழந்த கோர விபத்து குறித்து விசாரணை செய்வதற்கு சிறப்பு விசாரணைக்குழு அமைக்கப்பட வேண்டும் என்று முன்னாள் போக்குவரத்து அமைச்சர் டத்தோஸ்ரீ டாக்டர் வீ கா சியோங், அரசாங்கத்தை கேட்டுக்கொண்டார்.
அதிகமானோர் பலியான இது போன்ற கோர விபத்து மீண்டும் நிகழாமல் இருப்பதை உறுதி செய்யவும், பாதுகாப்பு அம்சங்களை மேம்படுத்தவும், இந்த கோர விபத்து குறித்து ஆராய்வதற்கு சிறப்பு விசாரணை குழுவை போக்குவரத்து அமைச்சு அமைக்க வேண்டும் என்று டாக்டர் வீ கா சியோங் கோரிக்கை விடுத்தார்.
இந்த விபத்தில் கனரக வாகனங்கள் சம்பந்தப்பட்டுள்ளதால் இதனை ஒரு வழக்கமான விபத்து என்று சாதாரணமாக கருதி விட முடியாது என்பதையும் அந்த முன்னாள் அமைச்சர் வலியுறுத்தினார்.
இவ்வாண்டில் கடந்த பத்து மாதங்களில் கனரக லோரிகள் சம்பந்தப்பட்ட 825 விபத்துகள் நிகழ்ந்து இருப்பதையும் அவர் சுட்டிக்காட்டினார்.
புக்கிட் அமான் போலீஸ் தலைமையகம் வெளியிட்டுள்ள தகவலின்படி நாள் ஒன்றுக்கு சராசரி மூன்று லோரிகள் விபத்துக்குள்ளாகின்றன என்பதையே இந்த சராசரி விகிதம் காட்டுகிறது. இதன் தொடர்பில் நேற்று நடந்த விபத்து குறித்து ஒரு முழு விசாரணை அவசியமாகிறது என்று மசீச தலைவரான டாக்டர் வீ கா சியோங் குறிப்பிட்டார்.