கோலாலம்பூர், டிச. 24-
ஐக்கிய அரபு சிற்றசு, அபுதாபியில் நேற்று முன்தினம் நடைபெற்ற 20 ஆவது உலக சீலாட் போட்டியில் புத்ரா தனிப்பிரிவில் சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்று மலேசியாவிற்கு பெருமை சேர்த்துள்ள வி. தர்மராஜ், மலேசிய இராணுவப்படையில் சார்ஜன் அந்தஸ்துக்கு பதவி உயர்த்தப்படுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
தர்மராஜ்ஜின் சார்ஜன் பதவி உயர்வு, வரும் ஜனவரி 2 ஆம் தேதியிலிருந்து அமலுக்கு வருவதாக மலேசிய இராணுவப்படையின் சீலாட் சங்கத்தின் செயலாளர் மேஜர் நூர்ஸ்யாஹிட்டாவத்தி அப்துல்லா தெரிவித்தார்.
சரவா, சிபுவில் உள்ள அரச மலேசிய இராணுவப்படையில் பணியாற்றி வரும் 28 வயதுடைய தர்மராஜ், கடந்த ஞாயிற்றுக்கிழமை அபுதாபியில் நடைபெற்ற உலக சீலாட் போட்டியில் உஸ்பெகிஸ்தான் வீரரை வீழ்த்தி தங்கத்தை வென்றதுடன் சாம்பியன்ஷிப் பட்டத்தையும் வென்றார்.
இதேபோன்று சீலாட் போட்டியில் தங்கத்தை வென்ற மற்றொரு வீரரான Ahmad பாவ்ஸான் ஹடியும் இராணுவப்படையில் சார்ஜன் அந்தஸ்துக்கு பதவி உயர்த்தப்படுவார் என்று மேஜர் நூர்ஸ்யாஹிட்டாவத்தி தெரிவித்தார்.