கோலாலம்பூர், டிச. 24-
வடக்கு தெற்கு நெடுஞ்சாலையில் மலாக்கா, அலோர் காஜாவில் நேற்று இரவு நிகழ்ந்த கோர சாலைவிபத்தில் எழுவர் உயிரிழந்த சம்பவத்தைத் தொடர்ந்து அந்த விபத்தில் சம்பந்தப்பட்ட 5 பிரதான வாகனங்கள் மீது உடனடியாக சோதனையிடுமாறு சாலை போக்குவரத்து இலாகாவான ஜேபிஜே.விற்கு உத்தரவிடப்பட்டுள்ளது என்று போக்குவரத்து அமைச்சர் அந்தோணி லோக் தெரிவித்தார்.
டிரெய்லர் லோரியிலிருந்து டயர் கழன்று, சுற்றுலா பேருந்தில் மோதி உயிர் பலி சம்பவத்திற்கு வித்திட்ட இந்த விபத்தில் சம்பந்தப்பட்டுள்ள டிரெய்லர் லோரி, சுற்றுலா பேருந்து, ஒரு எம்.பி.வி. வாகனம் உட்பட 5 வாகனங்களின் நிலை குறித்து ஆராயும்படி அந்தோணி லோக் குறிப்பிட்டார்.
இரவு 8.30 மணியளவில் நிகழ்ந்த இந்த கோர விபத்தில் இரண்டு வயது ஆண்குழந்தை உட்பட எழுவர் சம்பவ இடத்திலேயே மாண்டனர். எம்.பி.வி வாகனத்தில் பயணம் செய்த எண்மரில் ஐவர் உயிரிழந்த வேளையில் பேருந்தில் அதன் ஓட்டுநர் மற்றும் பயணி ஒருவர் மரணம் அடைந்தனர்.
சம்பந்தப்பட்ட வர்த்தக வாகனங்களின் பாதுகாப்பு அம்சங்களில் குறைபாடுகள் இருக்குமானால் அந்த கனரக வாகனங்களின் நிறுவனங்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கும்படி பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக அந்தோணி லோக் விளக்கினார்.