எம்.எச். 370 விமானத்தை தேடுவதில் அரசு முழு ஒத்துழைப்பு நல்கும்

கோலாலம்பூர்.டிச. 26-


பத்தாண்டுகளுக்கு முன்பு மாயமான மலேசிய ஏர்லைன்ஸிற்கு சொந்தமான எம்.எச். 370 விமானத்தை தேடி கண்டு பிடிக்கும் முயற்சி பலன் தருமானால் அந்த விமானத்தை தேடுவதில் அரசாங்கம் முழு ஒத்துழைப்பு நல்கும் என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் உறுதி அளித்துள்ளார்.

அரசாங்கத்தின் நிதியை விவேகமாக பயன்படுத்துவதை உறுதி செய்யும் அதேவேளையில் விமானத்தை தேட வேண்டிய அவசியத்தை முன்னிலைப்படுத்தும் முயற்சியையும் பிரதமர் வலியுறுத்தினார்.

பத்து ஆண்டுகளுக்கு முன்பு வான் போக்குவரத்து ராடாரிலிருந்து மர்மமான முறையில் காணாமல் போன அந்த விமானம், மாயமான விவகாரத்தில் பல கேள்விகளுக்கும், மர்மங்களுக்கும் இன்னும் விடை காண முடியாமல் உள்ளன.

அந்த விமானத்தை தேடி கண்டு பிடிக்குமாறு பாதிக்கப்பட்ட குடும்பங்கள் மட்டுமல்ல பொதுமக்கள் கோருவதில் நியாயம் இருப்பினும் ஒரு நீண்ட காலத்திற்கு தேடப்பட்ட விமானத்திற்கு எதிர்பார்க்கப்பட்ட திருப்புமுனை கிட்டுமானால், விமானத்தை தேடுவதில் அரசாங்கம் முழு ஒத்துழைப்பு நல்கும் என்று டத்தோஸ்ரீ அன்வார் குறிப்பிட்டார்.

2014 ஆம் ஆண்டு மார்ச் 8 ஆம் தேதி கோலாலம்பூரிலிருந்து பெய்ஜிங்கை நோக்கிய பயணத்தில் 239 பேருடன் காணாமல் போன எம்.எச். 370 விமானத்தை தேடும் பணியை மீண்டும் தொடங்குவதற்கு கடல் ரோபோட்டிக்ஸ் நிறுவனமான ஓசியன் இன்பினிட்டி மேற்கொள்ளும் முயற்சிக்கு போக்குவரத்து அமைச்சு கொள்கை அளவில் ஒப்புக்கொண்டுள்ளதாக அதன் அமைச்சர் அந்தோணி லோக் கடந்த வாரம் அறிவித்து இருந்தார்.

அரசாங்கத்தின் இந்த நிலைப்பாடு தொடர்பில் எதிர்வினையாற்றிய பிரதமர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

WATCH OUR LATEST NEWS