ஜோகூர்பாரு, டிச. 26-
ஜோகூர்பாரு, தாமான் டேசா ஸ்கூடாய் சாலை வட்டத்திற்கு அருகில் ஜாலான் பொந்தியான் லாமாவில் பின்னிரவு 12.11 மணியளவில் நிகழ்ந்த சாலை விபத்தில் இரு ஆடவர்கள் மாண்டனர்.
இரு வாகனங்கள் சம்பந்தந்தப்பட்ட இந்த விபத்து தொடர்பில் பின்னிரவு 12.17 மணியளவில் தாங்கள் அவசர அழைப்பை பெற்றதாக ஸ்கூடாய், தீயணைப்பு, மீட்பு நிலையத்தைச் சேர்ந்த கமாண்டர் சுராய்னி அட்னான் தெரிவித்தார்.
புரோட்டோன் வாஜா கார் ஒன்று பத்து டன் லோரியுடன் மோதியதில் காரின் இடிப்பாடுகளுக்கு இடையில் சிக்கி 43 வயது நபர், சம்பவ இடத்திலேயே மாண்ட வேளையில் 43 வயதுடைய மற்றொருவர், இடிபாடுகளுக்கு இடையில் சிக்காத நிலையில் கடும் காயங்களுடன் உயிரிழந்ததாக அவர் குறிப்பிட்டார்.
இடிபாடுகளுக்கு இடையில் சிக்கிய ஓர் ஆடவரின் உடலை மீட்பதற்கு பிரத்தியேக சாதனங்களை வீரர்கள் பயன்படுத்தியதாக அவர் மேலும் கூறினார்.