கல்வத் குற்றவாளிக்கு மக்கள் முன்னிலையில் பிரம்படித் தண்டனை நிறைவேற்றப்படும்

கோலத்திரெங்கானு, டிச. 26-


கல்வத் குற்றச்சாட்டில் குற்றவாளி என்று உறுதி செய்யப்பட்டு தீர்ப்பளிக்கப்பட்ட ஆடவர் ஒருவருக்கு 6 பிரம்படித் தண்டனை மக்கள் முன்னிலையில் நிறைவேற்றப்படவிருக்கிறது.

திரெங்கானு மாநிலத்தில் நாளை டிசம்பர் 27 ஆம் தேதி வெள்ளிக்கிழமை தொழுகைக்கு பிறகு 42 வயது முகமட் அப்பெண்டி அவாங் என்ற நபருக்கு இத்தண்டனை நிறைவேற்றப்படவிருக்கிறது.

திரெங்கானு மாநிலத்தில் ஷரியா சட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட திருத்தத்திற்கு பிறகு கல்வத் குற்றவாளி ஒருவருக்கு மக்கள் முன்னிலையில் தண்டைனை நிறைவேற்றப்படவிருக்கும் முதலாவது சம்பவம் இதுவாகும்.

கோலத்திரெங்கானுவில் உள்ள மஸ்ஜிட் அல்- முக்தாபி பில்லா ஷா பள்ளிவாசலில் ஓர் இடத்தில் தண்டனை நிறைவேற்றப்படுவதற்கு ஷரியா உயர் நீதிமன்ற நீதிபதி கமால்ருவாஸ்மி இஸ்மாயில் l இடத்தையும், நேரத்தையும் நிர்ணயம் செய்துள்ளார்.

திருமணம் ஆனப்பின்னரும் பிற பெண்களுடன் தொடர்பில் இருக்கும் கல்வத் குற்றவாளிகள் உட்பட தகாத உறவில் ஈடுபடும் குற்றவாளிக்கு கடும் தண்டனை நிறைவேற்றப்படுவதற்கு ஏதுவாக கடந்த 2022 ஆம் ஆண்டில் ஷரியா சட்டம் திருத்தப்பட்டது.

தண்டனைக்கு ஆளாகிய முகமட் அப்பெண்டி அவாங், ஏற்கனவே கல்வத் குற்றத்திற்காக கடந்த 2023 ஆம் ஆண்டு ஜுலை மாதம் 11 ஆம் தேதி திரெங்கானு, கெமாமான் ஷரியா கீழ் நீதிமன்றம் அவருக்கு 2,700 ரிங்கிட் அபராதம் அல்லது , மூன்று மாத சிறைத் தண்டனை விதித்தது.

அதே குற்றத்தை அந்த நபர் மீண்டும் கடந்த ஜனவரி 25 ஆம் தேதி புரிந்ததன் பேரில் அவருக்கு மூவாயிரம் வெள்ளி அபராதம் அல்லது சிறை மற்றும் 6 பிரம்படித் தண்டனை விதித்தது.

ஷரியா சட்டத்தின் கீழ் இரண்டாவது முறையாக கல்வத் குற்றத்தில் பிடிபடுகின்றவர்களுக்கு பொது மக்கள் முன்னிலையில் பிரம்படித் தண்டனை நிறைவேற்றப்படுவதற்கு வகை செய்யப்பட்டுள்ளது..

இதனிடையை திரெங்கானு மாநில சட்டத்தின் கீழ் நிறைவேற்றப்படும் இந்தப் பிரம்படித்தண்டனை நிறைவேற்றத்தை பார்ப்பதற்கு 70 பேர் மட்டுமே அனுமதிக்கப்படுவர் என்று போலீசார் அறிவித்துள்ளனர்.

அதேவேளையில் தண்டனை நிறைவேற்றத்தை புகைப்படம் எடுக்கவோ அல்லது வீடியோ படம் பதிவு செய்வோ தடை விதிக்கப்பட்டுள்ளது.

தண்டனை நிறைவேற்றத்தை பார்ப்பதற்கு அனுமதிக்கப்படுகின்றவர்கள், தங்கள் வசம் கைப்பேசி வைத்திருப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

அனைவரும் கடும் பரிசோதனைக்கு பின்னரே தண்டனை நிறைவேற்றத்தைப் பார்ப்பதற்கு அனுமதிக்கப்படுவர் என்று கோலத்திரெங்கானு மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி அஸ்லி முகமட் நூர் தெரிவித்துள்ளார்.

ஒரு தட்சரான முகமட் அப்பெண்டி அவாங்கிற்கு தண்டனை சுமூகமாக நிறைவேற்றப்படுவதை உறுதி செய்வதற்கு பாதுகாப்புப்பணியில் 40 க்கும் மேற்பட்ட போலீஸ்காரர்கள் கடமையில் அமர்த்தப்படுவர் என்று அவர் குறிப்பிட்டார்.

WATCH OUR LATEST NEWS