Ziarah MADANI@Finas அன்பளிப்பை 100 கலைஞர்கள் பெறுவர்

கோலாலம்பூர், டிச. 27-

கலைத்துறையே தங்களின் வாழ்க்கை ஜீவாதாரம் என்று கருதி, அத்துறைக்கே தங்களை அர்ப்பணித்துக்கொண்ட நிலையில், தற்போது நோய் உபாதைகளுக்கு ஆளாகி பல்வேறு சிரமங்களை எதிர்நோக்கியுள்ள கலைஞர்களுக்கு உதவிக்கரம் நீட்டி வரும் மலேசிய திரைப்பட மேம்பாட்டு வாரியமான Finas, அடுத்த ஆண்டில் 100 கலைஞர்களுக்கு உதவுவதற்கு இலக்கு கொண்டுள்ளது.

கலைஞர்களுக்கு உதவும் தனது Ziarah MADANI@Finas வாயிலாக இவ்வாண்டு 48 கலைஞர்கள் உதவித் தொகையை பெற்ற வேளையில் இந்த எண்ணிக்கை அடுத்த ஆண்டு 100 பேராக இருக்கும் என்று Finas இலக்கு கொண்டு இருப்பதாக தொடபுத்துறை துணை அமைச்சர் Teo Nie Ching தெரிவித்தார்.

பக்காத நோயினால் பாதிக்கப்பட்டுள்ள நாட்டின் மூத்த நகைச்சுவை கலைஞர் சத்தியா என்ற சத்தியா பெரியசாமியின் இல்லத்திற்கு இன்று வருகைப்புரிந்த துணை Teo Nie Ching, 60 வயதுடைய அந்த மூத்த கலைஞரை நலம் விசாரித்ததுடன், Ziarah MADANI@Finas- ஸின் உதவித் தொகையையும், உணவுக்கூடையும் வழங்கியப்பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில் இதனை தெரிவித்தார்.

Ziarah MADANI@Finas உதவித்திட்டத்திற்காக பிரத்தியேக நிதி எதுவும் ஒதுக்கீடு செய்யப்படவில்லை. ஆனால், Finas தொழில்துறை பணியாளர்களின் சமூக நல விவகார நடவடிக்கைக்குழு வாயிலாக MAPIN, FELDA போன்ற வியூக சகாக்களின் ஒத்துழைப்புடன் உதவித் தேவைப்படக்கூடிய கலைஞர்களுக்கு ஒரு முறை வழங்கக்கூடிய இந்த அன்பளிப்புத் தொகை வழங்கப்பட்டு வருவதாக Teo Nie Ching குறிப்பிட்டார்.

உதவித் தேவைப்படக்கூடிய கலைஞர்களுக்கு உதவும் நோக்கில் Finas-ஸின் Ziarah MADANI@Finas மற்றும் தொடர்புதுறை அமைச்சின் இந்த நல்லெண்ண வருகை அமைந்திருப்பதையும் துணை அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

கோலாலம்பூர், Setapak Jaya, DBKL பொது குடியிருப்புப்பகுதியில் வசித்து வரும் சத்தியா போன்ற மூத்த கலைஞர்களுக்கு இதுபோன்ற உதவிகள் அவர்களின் சிரமத்தை குறைக்கும் என்று Teo Nie Ching நம்பிக்கைத் தெரிவித்தார்.

அதேவேளையில் ஒரு முறை மட்டுமே வழங்கக்கூடிய உதவியாக இது இருந்த போதிலும் பெரும்பாலான கலைஞர்கள் சொந்த தொழில் புரிகின்றவர்களாக இருக்கின்றனர்.

நோய் போன்ற உபாதைகளுக்கு இலக்காகும் போது அவர்களுக்கு நீடித்த காலத்திற்கு உதவுக்கூடிய ஒரு நிரந்தர திட்டம் தேவைப்படுகிறது.

எனவே கலைஞர்களின் நலனை பாதுகாப்பதற்கு சமூக பாதுகாப்பு நிறுவனமான சொக்சோ மற்றும் தொழிலாளர் சேமநிதி வாரியமான EPF-வுடன் இணைந்து i- Saraan KWSP போன்ற திட்டங்களில், கலைஞர்கள் பங்கேற்பதற்கு Finas ஒரு கருத்திணக்க ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டு இருப்பதையும் Teo Nie Ching தெளிவுபடுத்தினார்.

WATCH OUR LATEST NEWS