டிச. 27-
எகிப்தை சேர்ந்த 37 வயது ஆடவர் ஒருவர், தன் குழந்தைகளை துன்புறுத்திய குற்றத்திற்காக நீதிமன்றத்தின் முன் நிறுத்தப்பட்டார். அவர் தன் நான்கு வயது மகனின் கழுத்தை தொலைபேசி கம்பியால் சுற்றியதாகவும், ஒரு வயது மகளை கட்டிலில் தூக்கி எறிந்ததாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இந்த சம்பவம் கடந்த டிசம்பர் 17ஆம் தேதி காலை பிரிக்பீல்ட்ஸில் உள்ள அவரது வாடகை வீட்டில் நடந்துள்ளது.
குழந்தைகள் சட்டம் 2001 பிரிவு 31 (1) (a)இன் கீழ் அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த பிரிவின் கீழ் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டால், அவருக்கு அதிகபட்சம் 50 ஆயிரம் ரிங்கிட் அபராதம் அல்லது 20 ஆண்டுகள் சிறை தண்டனை அல்லது இரண்டும் விதிக்கப்படலாம். அரசு வழக்கறிஞர் oshua Tee Yee Khuan , குற்றம் சாட்டப்பட்டவருக்கு ஜாமீன் வழங்க எதிர்ப்பு தெரிவித்தார். ஏனெனில், இது ஜாமீனில் வெளிவர முடியாத குற்றம் என்றும், மேலும் குற்றம் சாட்டப்பட்டவருக்கு வழக்கறிஞர் யாரும் இல்லை என்றும் அவர் கூறினார்.
நீதிபதி Siti Aminah Ghazali , வழக்கின் அடுத்த கட்ட விசாரணையை ஜனவரி 20ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தார். அன்றைய தினம் ஆவணங்கள் சமர்ப்பிக்கப்படும் என்றும், குற்றம் சாட்டப்பட்டவருக்கு வழக்கறிஞர் நியமிக்க ஏற்பாடு செய்யப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.