டிச. 27-
மக்களை பாதிக்கக்கூடிய மின்சார கட்டண உயர்வை அரசாங்கம் அனுமதிக்காது என பிரதமர் அன்வார் இப்ராஹிம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். தெனாகா நேஷனல் பெர்ஹாட் மின் கட்டண உயர்வை அறிவித்துள்ள நிலையில், இது தொடர்பாக துணைப் பிரதமரை தொடர்பு கொண்டு விளக்கம் கேட்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.
மின் கட்டண உயர்வு ஏற்பட்டால், அது அதிக வருவாய் ஈட்டும் செல்வந்தர்களையும் தொழில்துறையினரையும் மட்டுமே பாதிக்கும். பெரும்பான்மையான மக்களை பாதிக்கக்கூடிய வகையில் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாது என்று பிரதமர் உறுதியளித்துள்ளார். கெடாவில் செய்தியாளர்களை சந்தித்தபோது அவர் இதனை தெரிவித்தார்.
TNB இன் அறிவிப்பின்படி, மலேசிய தீபகற்பத்தில் மின்சார கட்டணம் 14.2 விழுக்காடு உயர்ந்து, ஒரு கிலோவாட்-மணிக்கு 45.62 சென் ஆக ஜூலை 2025 முதல் உயரும். இந்த மாற்றம் மூன்று ஆண்டு கால RP4 திட்டத்தின் கீழ் ஜனவரி 2025 முதல் டிசம்பர் 2027 வரை அமலில் இருக்கும். இருப்பினும், ஜூன் 2025 வரை கட்டணத்தில் எந்த மாற்றமும் இருக்காது எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.
TNB க்கு ஏற்படும் செலவு அதிகரிப்பை அரசாங்கம் புரிந்துகொள்கிறது. ஆனால், கட்டண உயர்வு பெரும்பான்மையான மக்களின் பொருளாதார நிலையை பாதிக்காத வகையில் இருக்க வேண்டும் என்பதில் அரசு கவனமாக உள்ளது என்றும் பிரதமர் அன்வார் இப்ராஹிம் குறிப்பிட்டார். மக்களின் நலனை கருத்தில் கொண்டே அரசாங்கம் செயல்படும் என்பதை அவர் வலியுறுத்தினார்.