கோலாலம்பூர், டிச. 28-
அரசாங்கப் பேச்சாளரும், தொடர்புத்துறை அமைச்சருமான ஃபாஹ்மி பாட்ஸிலுக்குஎதிராக எவ்வித ஆதாரமின்றி அபாண்டமான குற்றச்சாட்டை தாம் கூறியதற்காக சமூக ஊடக பிரபலம் ஷாலினி பெரியசாமி பகிரங்க மன்னிப்புக் கோரியுள்ளார்.
தம்முடைய இந்த செயலுக்காக வருந்துவதாகவும், எதிர்காலத்தில் இது போன்ற அடிப்படையற்ற குற்றச்சாட்டை முன்வைக்கப்போவதில்லை என்றும், தம்முடைய தவற்றுக்காக அமைச்சர் ஃபாஹ்மியிடம் பகிரங்க மன்னிப்புக்கோருவதாகவும் ஷாலின் பெரியசாமி, நேற்றிரவு பதிவேற்றம் செய்துள்ள டிக் டோக் காணொளியில் தெரிவித்துள்ளார்.
கடந்த டிசம்பர் 25 ஆம் தேதி கிறிஸ்துமஸ் தினத்தன்று தாம் வழக்கமாக டிக் டோக் நேரலை நிகழ்வில் கலந்து கொண்ட போது எதிர்பாராத விதமான உத்துசான் டிக் டேக்கில் வெளியான செய்தியின் தலைப்பை மட்டும் படித்து விட்டு, சரவா மாநில லஞ்ச ஊழலில் அமைச்சர் ஃபாஹ்மி சிக்கியுள்ளார் என்ற அபாண்டமான குற்றச்சாட்டை முன்வைத்ததாக ஷாலினி தெரிவித்துள்ளார்.
அந்த செய்தி குறித்து தாம் ஆழமாக விவரிக்கவில்லை என்ற போதிலும் லஞ்ச ஊழலில் அமைச்சர் ஃபாஹ்மி சிக்கியிருப்பதாக தாம் கூறியதைத் தொடர்ந்து 200 முதல் 300 பேர் வரையில் அந்த செய்தியை பகிர்ந்த நிலையில் தமது நண்பர் தம்மை உடனடியாக அழைத்ததாக ஷாலினி குறிப்பிட்டார்.
அமைச்சர் ஃபாஹ்மிக்கு எதிராக தாம் தவறான குற்றச்சாட்டை முன்வைத்திருப்பதாக கூறினார். முதலில் அந்த லஞ்ச ஊழல் நடந்தது சரவாக்கில் இல்லை என்றும் அது சபாவில் நடந்தது என்றும் அவர் விளக்கம் தந்தார்.
அத்துடன் லஞ்ச ஊழல் தொடர்பான காணொளி ஒன்றை அகற்றும்படி மலேசிய தொடர்பு, பல்லூடக ஆணையமான எம்.சி.எம்.சி. உத்தரவிட்டுள்ளது என்ற தகவலைதான் ஃபாஹ்மி கூறினாரே தவிர அவர் லஞ்ச ஊழலில் சம்பந்தப்படவில்லை என்று தமது நண்பர் விளக்கம் தந்த பின்னரே அந்த செய்தியின் உண்மையான தன்மை தமக்கு தெரியவந்ததாக ஷாலினி குறிப்பிட்டார்.
எனினும் உத்துசான் டிக்டோக்கில் வந்த செய்தியை முழுமையாக கேட்காமல், படிக்காமல் அமைச்சர் ஃபாஹ்மி, சரவாக் லஞ்ச ஊழலில் சிக்கியுள்ளார் என்று தாம் அவசரப்பட்டு தவறான குற்றச் சாட்டை முன்வைத்து விட்டதை ஷாலினி ஒப்புக்கொண்டுள்ளார்.