நஜிப்புக்கு ஆதரவு தெரிவிக்க 200 க்கும் மேற்பட்ட பேருந்துகளில் ஆதரவாளர்கள்! நஜிப்பின் மகன் Nazifuddin தகவல்

டிச. 29-

முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக்கிற்கு ஆதரவாக ஜனவரி 6-ஆம் தேதி நடைபெறவிருக்கும் பேரணிக்கு 200-க்கும் மேற்பட்ட பேருந்துகளில் ஆதரவாளர்கள் அழைத்துச் செல்லப்படுவார்கள் என்று அவரது மகன் Nazifuddin தெரிவித்துள்ளார். நஜிப்பின் ஒன்பது ஆண்டு கால பிரதமர் பதவியில் அவர் செய்த பங்களிப்பிற்காக அவரை மதிக்கும் மலேசியர்கள் இந்த பேரணியில் கலந்து கொள்வார்கள் என்று அவர் கூறினார்.

PAS, Umno, பெர்சத்து ஆகிய கட்சிகளைச் சேர்ந்த ஆதரவாளர்கள் நஜிப்பை விடுவிப்பதற்காக ஒன்றிணைந்து செயல்படுவார்கள் என்று Nazifuddin தனது உரையில் குறிப்பிட்டார். Umno-விலிருந்து 118 பேருந்துகளும், PAS-லிருந்து 100 பேருந்துகளும் பேரணியில் கலந்து கொள்ளும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

நஜிப்பிற்கு போதிய நீதி கிடைக்கவில்லை என்று கருதும் அவரது ஆதரவாளர்கள், தற்போதைய ஒற்றுமை அரசாங்கத்தின் மீது நம்பிக்கைக் குறைபாட்டுடன் இருப்பதாக Nazifuddin கூறினார். இந்த கருத்து, நஜிப் ஆதரவாளர்களின் உணர்வுகளை பிரதிபலிக்கிறது என்றார்.

முந்தைய மாமன்னரால் பிறப்பிக்கப்பட்டதாக கூறப்படும் வீட்டுக் காவல் தொடர்பான கூடுதல் கட்டளை விவ்வகாரத்தில் நஜிப்பின் மேல்முறையீட்டு மனுவை மேல்முறையீட்டு நீதிமன்றம் விசாரணை செய்யும் நாளில் இந்த பேரணி நடைபெறுகிறது. SRC இன்டர்நேஷனல் வழக்கில் தண்டனை குறைக்கப்பட்ட பின்னர், நஜிப் தற்போது ஆறு ஆண்டுகள் சிறைத்தண்டனை அனுபவித்து வருகிறார்.

WATCH OUR LATEST NEWS