மலேசிய சிலம்ப வீரர்களுக்கு விமான நிலையத்தில் மகத்தான வரவேற்பு

பினாங்கு, டிச.30-


கட்டார் தலைநகர் டோஹாவில் நடைபெற்ற பொது சிலம்பம் போட்டியில் 12 தங்கப் பதக்கங்களை குவித்து, சாம்பியன் பட்டத்தை வென்று, மலேசியாவின் பெயரை அனைத்துலக விளையாட்டு அரங்கில் மணக்கச் செய்த 6 மலேசிய வீரர்களுக்கு பினாங்கு அனைத்துலக விமான நிலையத்தில் மகத்தான வரவேற்பு நல்கப்பட்டது.

பினாங்கு இந்து அறப்பணி வாரியத்தின் தலைவர் ஆர்.எஸ்.என். ராயர், துணைத் தலைவர் செனட்டர் டாக்டர் ஆர்.ஏ. லிங்கேஸ்வரன், பினாங்கு ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோஸ்ரீ சுந்தராஜு சோமு, பினாங்கு இளைஞர், விளையாட்டுத்துறை மற்றும் சுகாதார ஆட்சிக்குழு உறுப்பினர் டேனியல் கூய் மற்றும் அறப்பணி வாரியத்தின் ஆணையரும், பினாங்கு மாநில மஇகா தொடர்புக்குழுத் தலைவருமான டத்தோ ஜே. தினகரன் ஆகியோர் 6 வீரர்களையும் விமான நிலையத்தில் வரவேற்றதுடன் தங்கள் வாழ்த்துகளையும், பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொண்டனர்.

இண்டிகோ விமானம் மூலம் பினாங்கு வந்து சேர்ந்த 6 பேருக்கும் பினாங்கு விமான நிலையத்தில் ஆர்.எஸ்.என். ராயர், டத்தோஸ்ரீ சுந்தரராஜு, டாக்டர் லிங்கேஸ்வரன், டத்தோ தினகரன் ஆகியோர் மாலை அணிவித்து, தங்கள் வாழ்த்துகளை கூறி வரவேற்றனர்.

ஆசிய அளவிலான சிலம்பப்போட்டியில் பிரகாஷ், சஷ்டிவீனா, லீனாஸ்ரீ, கவித்திரா, டர்னிஷா மற்றும் ரனிஷா ஆகியோர் தலா 2 தங்கப் பதக்கங்களை பெற்று இருப்பது, மலேசியாவிற்கு மட்டுமின்றி, பினாங்கு மாநிலத்திற்கும் பெருமை சேர்த்துள்ளதாக அவர்கள் வர்ணித்துள்ளனர்.

காரணம், அந்த 6 தங்கங்களும் பினாங்கு மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் ஆவர்.

அதற்கு முன்னதாக, பினாங்கு மண்ணின் மைந்தர்களான அந்த ஆறு பேரையும் வரவேற்கும் வகையில் சம்பந்தப்பட்ட வீரர், வீராங்கனைகளின் குடும்பத்தினரும், பொது மக்களும், விமான நிலையத்தில் பதாகைகளை ஏந்திய வண்ணம் வீர வரவேற்பை நல்கினர்.

வரலாறு படைத்துள்ள 6 பேரின் மகத்தான சாதனை குறித்து கருத்துரைத்த டாக்டர் லிங்கேஸ்வரன், தமிழர்களின் பாரம்பரிய தற்காப்புக் கலையான சிலம்பம், தமிழர்களின் வீரம் செறிந்த வாழ்வியலுடன் இரண்டரக் கலந்தது என்பதை இந்த 6 பேரும் உலகிற்கு உரக்கச் சொல்லியிருக்கின்றனர் என்று வர்ணித்தார்.

வலிமை, நிதானம், பொறுமை, சகிப்புத்தன்மை, மன உறுதி, போராட்டக்குணம் என்று மானுட வாழ்வின் அறு குணங்களின் அடையாளமாக ஆறு மலேசிய வீரர்களும் தங்களின் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தியது மூலம் சிலம்பக் கலைக்கு சிறந்த அணிகலன்களாக மாறி, பெருமை சேர்ந்துள்ளனர்.

இந்த அறுவரின் வெற்றியைப் போற்றிக் கொண்டாடும் வேளையில், சிலம்பம் நாட்டின் விளையாட்டுத்துறையை மேம்படுத்தக்கூடியது என்பதால் அந்த தற்காப்புக் கலையை தொடக்க மற்றும் இடைநிலைப்பள்ளிகளின் புறப்பாட நடவடிக்கைகளில் ஒரு பகுதியாக இணைக்கப்பட வேண்டும் என்று கல்வி அமைச்சுக்கு டாக்டர் லிங்கேஸ்வரன் வலியுறுத்தியுள்ளார்.
ற்காக கடல்சார் அமலாக்கப்பிரிவினர் விரைந்ததாக அதன் பகாங் மாநில தலைவர் முதல் நிலை அதிகாரி மஸ்லான் மாட் ரெஜாப் தெரிவித்தார்.

WATCH OUR LATEST NEWS