2025 ஐ வரவேற்கும் மலேசியாவின் புதிய திட்டங்கள்

கோலாலம்பூர், டிச.31-


2024 ஆண்டிற்கு விடைகொடுக்க இன்னும் 11 மணி நேரமே எஞ்சியிருக்கும் வேளையில் நாளை பிறக்கவிருக்கும் 2025 ஆம் ஆண்டு , புத்தாண்டில் மலேசியாவில் அமல்படுத்தவிருக்கும் புதிய திட்டங்களை உள்ளடக்கிய பட்டியல் தயாராகி விட்டது.

நாளை ஜனவரி முதல் தேதியிலிருந்து தென்கிழக்காசிய கூட்டமைப்பான ஆசியானுக்கு மலேசியா அதிகாரப்பூர்வமாக தலைமையேற்கவிருக்கிறது.

சமூக உடகங்களை தளமாக கொண்டு, செயல்பட்டு வரும் நிறுவனங்கள் நாளை முதல் தேதியிலிருந்து தங்களின் சேவைகளுக்கான லைசென்ஸை, மலேசிய தொடர்பு, பல்லூடக ஆணையமான எம்.சி.எம்.சி.-யில் கொண்டிருக்க வேண்டும் என்ற புதிய சட்டம் அமல்படுத்தப்படவிருக்கிறது.

சமூக ஊடகங்களின் பயனர்கள் குறிப்பாக, சிறார்கள் மற்றும் பாதிப்பை ஏற்படுத்த வல்ல தரப்பினரை பாதுகாப்பதுடன், இணையச் செய்தி மற்றும் சமூக ஊடகங்களின் கட்டுப்பாடுகளை வலுப்படுத்தும் நோக்கில் புதிய சட்டம் நடைமுறைப்படுத்தப்படவிருக்கிறது.

பொது சுகாதாரத்திற்கான புகைப்பிடித்தல் பொருட்களுக்கான 2024 ஆம் ஆண்டு சட்டத்திருத்தம், அமல்படுத்தப்பவிருக்கிறது. இதன் வழி பொது இடங்கள், மருத்துவமனைகள்,சலவை மையங்கள், பணியிடங்கள் உட்பட 28 வகையான இடங்களில் புகைப்பிடிக்க தடைவிதிக்கப்படுகிறது.

பணியிட பேரிடர்களில் பாதிக்கக்கூடிய அங்காடி வியாபாரிகள் மற்றும் லைசென்ஸ் பெற்ற சிறுவணிகர்களுக்கு உதவும் நோக்கில் அவர்கள் சமூக பாதுகாப்பு நிறுவனமான சொக்சோவில் சந்தாப் பதிவு கொண்டிருப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

பல்கலைக்கழகங்களில் பயிலும் மாணவர்கள் உள்ளூர் வழித்தடங்களுக்கான விமானச் சேவைகளுக்கு அரசு வழங்கி வரும் பிலைசிஸ்வா திட்டத்தில் வழங்கப்பட்டு வந்த உதவித் தொகை 300 ரிங்கிட்டிலிருந்து 400 ரிங்கிட்டாக உயர்த்தப்பட்டுள்ளது.

நாட்டின் டிஜிட்டல் இலக்கவியல் பொருளாதாரத் திட்டங்களை ஊக்குவிக்கும் வகையில் கிள்ளான் பள்ளத்தாக்கு, வடக்கு மற்றும் தெற்குப்பகுதிகளுக்கான மலேயன் ரயில்வே பெர்ஹாட்டின் டிக்கெட்டை வாங்குவதறகு ரொக்கமில்லா கட்டணமுறையை அறிமுகப்படுத்தவிருக்கிறது.

சிறார் பராமரிப்பு மையங்கள் அனைத்தும் தங்களுக்கு வழங்கப்பட்ட உரிமத்தை காட்சிக்கு வைக்க வேண்டும்.

ஜோகூர் மாநிலத்தில் நீண்ட காலமாகவே அனுசரிக்கப்பட்டு வந்த வார இறுதி நாட்கள் விடுமுறையான வெள்ளி, சனிக்கிழமை, இனி சனிக்கிழமை , ஞாயிற்றுக்கிழமை என நடைமுறைப்படுத்தப்படவிருக்கிறது.

சபா மாநிலத்தின் 11 ஆவது புதிய ஆளுநராக துன் மூசா அ மான், நாளை முதல் அதிகாரப்பூர்வமாக பதவியில் அமர்கிறார் ஆகியவையே நாளை புதன்கிழமை 2025 ஆம் ஆண்டு, புத்தாண்டில் அமலுக்கு வரும் திட்டங்களாகும்.

WATCH OUR LATEST NEWS