ஜன.3-
பாக்கிஸ்தானிலிருந்து வெளளை அரிசி இறக்குமதி செய்வது குறித்து தங்களது நிறுவனத்திடம் எந்தவிதமான பேச்சு வார்த்தையும் நடைபெறவில்லை என்று பெர்னாஸ் என்றழைக்கப்படும் Padiberas Nasional Berhad நிறுவனம் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது. பாகிஸ்தானிலிருந்து அரிசி இறக்குமதி செய்யலாம் என்று தேசிய வாழ்க்கைச் செலவு நடவடிக்கை மன்றத்தின் தலைவர் Datuk Syed Abu Hussin Hafiz Syed Abdul Fasal கருத்து தெரிவித்திருந்த நிலையில் பெர்னாஸ் இவ்வாறு விளக்கம் அளித்துள்ளது. மலேசியாவில் அரிசிக்கு எந்தத் தட்டுப்பாடும் இல்லை என்றும், இறக்குமதி செய்யப்படும் அரிசி போதுமான அளவு கையிருப்பில் உள்ளது என்றும் பெர்னாஸ் மேலும் தெரிவித்துள்ளது.
சந்தையில் அரிசி விலையில் ஏற்படும் குழப்பத்தையும், அதனால் ஏற்படும் பாதிப்புகளையும் தவிர்க்க, அரிசி இறக்குமதி குறித்த கருத்துக்களை தெரிவிக்கும் முன் சம்பந்தப்பட்ட தரப்பினருடன் கலந்தாலோசித்து தகவல்களை வெளியிட வேண்டும் என்று பெர்னாஸ் வலியுறுத்தியுள்ளது. உள்ளூர் சந்தையில் அரிசி விலையும் விநியோகம் தொடர்பான சிக்கலைத் தீர்க்கவும் பாகிஸ்தானிலிருந்து அரிசி இறக்குமதி செய்வது ஒரு சிறந்த வழி என்று Datuk Syed Abu Hussin தெரிவித்திருந்தார். மேலும், இந்த யோசனை நாட்டின் ஒரே அரிசி இறக்குமதியாளரான பெர்னாஸிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது என்றும் அவர் கூறியிருந்தார்.
தாய்லாந்து, வியட்நாம், இந்தியா போன்ற நாடுகளைப் போலவே பாகிஸ்தானும் பெர்னாஸின் முக்கிய அரிசி விநியோகிப்பாளர்களில் ஒன்று என்று அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. உலக சந்தை விலைக்கு ஏற்ப, மலேசியாவிலும் போட்டி விலையில் அரிசி விற்பனை செய்யப்படுவதை பெர்னாஸ் உறுதி செய்கிறது. அரசாங்கத்துடன் செய்து கொண்ட ஒப்பந்தப்படி, விவசாயிகள் தங்கள் நெல்லை தனியார் ஆலைகளுக்கு விற்க முடியாத சூழ்நிலையில், அவர்களுக்கு ஒரு நல்ல சந்தையை பெர்னாஸ் உறுதி செய்கிறது.
ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக, நிலையான இருப்பு மேலாண்மை, போதுமான அரிசி கையிருப்பு போன்ற சமூக பொறுப்புகளை பெர்னாஸ் மேற்கொண்டு வருகிறது. இந்த கடமைகளின் மதிப்பு 3.2 பில்லியன் ரிங்கிட் ஆகும். மேலும், இறக்குமதி செய்யப்படும் அரிசியின் லாபத்தில் 30 விழுக்காடு விவசாயிகளுடன் பகிர்ந்து கொள்ளப்படுகிறது. அண்மையில் விவசாயிகளுக்கு ஒரு முறை வழங்கப்படும் 60 மில்லியன் ரிங்கிட் உதவியும் இதில் அடங்கும் என பெர்னாஸ் வெளியிட்ட அறிக்கையில் விளக்கியது