சித்ரவதை அம்சங்கள் ஏதும் இல்லை என்பதும் உறுதிச் செய்யப்பட்டுள்ளது

ஜன.3-

கோலாலம்பூர் மலாயா பல்கலைக்கழக வளாகத்தில் இறந்து கிடந்த ஐந்து பூனைகளில் நான்கு பூனைகள் விலங்குக் கடிக்கு ஆளானதும் அச்சம்பவத்தில் சித்ரவதை அம்சங்கள் ஏதும் இல்லை என்பதும் உறுதிச் செய்யப்பட்டுள்ளது. கால்நடைச் சேவைத் துறை மேற்கொண்ட பரிசோதனையிலும் ஆய்விலும் அது தெரிய வந்துள்ளதாக கோலாலம்பூர் காவல் துறைத் துணைத் தலைவர் Datuk Azry Akmar Ayob தெரிவித்தார். கடந்தாண்டு டிசம்பர் மாதம் ஐந்து பூனைகள் இறந்து கிடந்தது தொடர்பில் ஐந்து புகார்கள் கொடுக்கப்பட்டதாக அவர் கூறினார்.

நான்கு பூனைகள் விலங்குக் கடியால் இறந்திருப்பது கண்டறியப்பட்டுள்ள நிலையில், மேலும் ஒரு பூனையின் கால்களில் மோசமான காயங்களும் எலும்பு முறிவும் ஏற்பட்டுள்ளது தெரிய வந்துள்ளது. அவை கூர்மையான ஆயுதங்களால் ஏற்படுத்தப்பட்டவை அல்ல என்றும் Azry Akmar சொன்னார். அப்பூனை இறந்ததற்கான காரணத்தைக் கண்டறிய விசாரணைகள் தொடரப்படுகின்றன. இவ்வேளையில் அச்சம்பவம் தொடர்பில் பல்கலைக்கழக விரிவுரையாளர்கள், மாணவர்கள், உதவி காவல் வீரர்கள், விலங்கு ஆர்வலர்கள், கால்நடை மருத்துவர் என இதுவரை 11 பேர்களடம் இருந்து வாக்குமூலங்கள் பெறப்பட்டுள்ளன.
இதனிடையே அச்சம்பவம் குறித்து CCTV கேமரா பதிவுகள் ஏதும் இல்லை என்றும் Azry Akmar தெரிவித்தார். மேலும் பேசிய அவர், பொதுமக்கள் அச்சம்பவம் தொடர்பில் ஆரூடங்கள் பரப்ப வேண்டாம் என்றும் கேட்டுக் கொண்டார்.

WATCH OUR LATEST NEWS