உலகத் தமிழ் வம்சாவளி மாநாடு மலேசியாவிற்கும் தமிழ்நாட்டிற்கும் இடையிலான தெப்புள்கொடி உறவை வலுப்படுத்துகிறது

பினாங்கு, ஜன.4-

பினாங்கில் இன்று தொடங்கியுள்ள உலகத் தமிழ் வம்சாவளி மாநாடு, மலேசியாவிற்கும், தமிழ்நாட்டிற்கும் இடையில் நீண்ட காலமாக கட்டிக்காக்கப்பட்டு வருகின்ற தெப்புள்கொடி உறவை நிரூபிக்கிறது என்று பினாங்கு முதலமைச்சர் Chow Kon Yeow புகழ்மாலை சூட்டினார்.

மலேசியாவிற்கும் தமிழ்நாட்டிற்கு இடையில் தமிழர்களின் மரபுவழி தொடர்ந்து வருகிறது. அதுவும் தமிழ்நாட்டிற்கும், மலேசியாவில் பினாங்கிற்கும் இடையில் நீண்ட காலமாகவே ஒரு வலுவான உறவு இருந்து வருகிறது. காரணம், தமிழர்கள் தமிழ்நாட்டிலிருந்து பினாங்கில்தான் முதல் முறையாக தரையிறங்கினர் என்ற ஒரு நீண்ட வரலாறு உண்டு.

இத்தகைய மகத்தான உறவை கொண்டுள்ள தமிழர்கள் குறிப்பாக உலகளாவிய தமிழ் சமுதாயத்தினர், இன்று பினாங்கில் ஒன்றுக்கூடி, தமிழுக்காக விழா எடுத்து இருப்பதிலும், அதனை கொண்டாடுவதிலும், தமிழர்களின் அடுத்தக்கட்ட நகர்வை நோக்கிய முன்னேற்றங்கள் குறித்து கலந்து ஆய்வு செய்வதிலும் பினாங்கு மாநிலம் உண்மையிலேயே பெருமிதம் கொள்வதாக Chow Kon Yeow தமது பாராட்டை தெரிவித்தார்.

இன்று சனிக்கிழமை காலையில் பினாங்கு, Dewan Sri Penang அரங்கில் தொடங்கியுள்ள உலகளாவிய தமிழ் வம்சாவளி மாநாட்டை அதிகாரப்பூர்வமாக தொடங்கி வைத்து சிறப்புரையாற்றுகையில் Chow Kon Yeow இதனை தெரிவித்தார்.

பினாங்கு மாநில ஆட்சிக்குழு உறுப்பினரும், பிறை சட்டமன்ற உறுப்பினரும், தமிழ் பற்றாளருமான டத்தோஸ்ரீ சுந்தராஜு சோமு தலைமையில் இணை ஏற்பாட்டளராக தமிழ்நாடு செல்வக்குமார் தலைமையிலான குழுவினருடன் இணைந்து முன்னெடுக்கப்பட்ட இந்த இரண்டு நாள் மாநாட்டை அதிகாரப்பூர்வமாக தொடக்கி வைப்பதில் தாம் பெருமிதம் கொள்வதாக Chow Kon Yeow குறிப்பிட்டார்.

இந்த மாநாட்டை பொருத்தமான இடத்தில் ஏற்பாடு செய்த டத்தோஸ்ரீ சுந்தராஜு சோமு தலைமையிலான குழுவினருக்கு தமது பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்துக்கொண்ட Chow Kon Yeow, தமிழர்களின் முன்னேற்றம், கலை, பண்பாடு, கலாச்சாரம், தொழில்முனைவு குறித்து விவாதிக்கக்கூடிய சிறந்த தளமாக இந்த மாநாடு விளங்கிறது என்றும், இதற்கு பினாங்கு அரசு தனது முழு ஆதரவை வழங்கியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

முன்னதாக, வரவேற்புரையாற்றிய டத்தோஸ்ரீ சுந்தராஜு சோமு, தமிழர்களை அடுத்தக்கட்ட நகர்வை நோக்கி கொண்டு செல்லவே இந்த மாநாடு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிட்டார்.

தமிழ்நாடு, பால்வளத்துறை மற்றும் கதர்க்துறை அமைச்சர் R.S. ராஜகண்ணப்பன், நாடாளுமன்ற உறுப்பினரும், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொள். திருமாவளவன், சட்டமன்ற உறுப்பினர் T. வேல்முருகன், சட்டமன்ற உறுப்பினர் E.R. ஈஸ்வரன் மற்றும் வேந்தர் டாக்டர் G. விஸ்வநாதன் ஆகியோர் இம்மாநாட்டிற்கு சிறப்பு பிரமுகர்களாக கலந்து கொண்டுள்ளனர்.

அதேவேளையில் பினாங்கு மாநில துணை முதலமைச்சர் ஜக்டிப் சிங் டியோ உட்பட ஆட்சிக்குழு உறுப்பினர்களும் சிறப்பு பிரமுகர்களாக கலந்து கொண்டுள்ளனர்.

முன்னதாக இந்த மாநாட்டையொட்டி ஏற்பாடு செய்யப்பட்ட கண்காட்சியையும் முதலமைச்சர் Chow Kon Yeow, பார்வையிட்டார். சுமார் 700க்கும் மேற்பட்ட பேராளர்கள் கலந்து கொண்டனர்.

WATCH OUR LATEST NEWS