பினாங்கு, ஜன.4-
கட்டார் தலைநகர் டோஹாவில் கடந்த டிசம்பர் 27 ஆம் தேதி நடைபெற்று முடிந்த ஆசிய பொது சிலம்பப்போட்டியில் 12 தங்கப்பதக்கங்களை குவித்து ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தை வென்று அனைத்துலக விளையாட்டு அரங்கில் மலேசியாவிற்கு பெருமை சேர்த்த 6 தேசிய வீரர்களுக்கு பினாங்கு மாநில அரசு தலா ஆயிரம் வெள்ளி ரொக்கத்தைம், நற்சான்றிதழையும் வழங்கி கெளரவித்தது.

இன்று பினாங்கு, டேவான் ஸ்ரீ பினாங் அரங்கில் தொடங்கியுள்ள உலகளாவிய தமிழ் வம்சாவளி மாநாட்டு நிகழ்வில் ஆசிய சிலம்பப்போட்டியில் தலா 2 தங்கம் வீதம் 12 தங்கங்களை குவித்த பினாங்கைச் சேர்ந்த ஆறு வீரர்களுக்கும் பினாங்கு முதலமைச்சர் சோவ் கோன் இயோ தலைமையில் மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோஸ்ரீ சுந்தராஜு இந்த கெளரவத்தையும் அங்கீகாரத்தையும் வழங்கினார்.
பிரகாஷ், சஷ்டிவீனா, லீனாஸ்ரீ, கவித்திரா, டார்னிஷா, ராணிஷா ஆகியோரே தங்கம் வென்ற மலேசிய சிலம்பப்போட்டியாளர்கள் ஆவர். இந்த அறுவருக்கும் முதலமைச்சர் சோவ் கோன் இயோ மற்றும் டத்தோஸ்ரீ சுந்தராஜு ஆகியோர் கையெழுத்திட்ட சான்றிதழ் வழங்கப்பட்டது.
இவர்கள் மலேசியாவிற்கு மட்டுமின்றி பினாங்கிற்கும் பெருமை சேர்த்துள்ளதாக டத்தோஸ்ரீ சுந்தராஜு விவரித்தார்.
இந்த அறுவரும் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் சரவாவில் நடைபெற்ற சுக்மா போட்டியில் தங்கப் பதக்கங்களை வென்றவர்கள் ஆவர்.