கோலாலம்பூர், ஜன.4
தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கான தேசிய நிலையில் தகவல் தொடர்பு தொழில்நுட்பப்போட்டி நடத்தப்படுவது, நடப்பு சூழ்நிலையில், காலத்திற்கு ஏற்ப முன்னெடுக்கப்பட்ட முயற்சியாகும் என்று இலக்கவியல்துறை அமைச்சர் கோபிந்த் சிங் டியோ பெருமிதம் தெரிவித்தார்.
நாடு தழுவிய நிலையில் நடைபெறும் இது போன்ற முயற்சிகளுக்கு தமது இலக்கவியல்துறை அமைச்சு ஆதரவும், மானியமும் வழங்குவதாக கோபிந்த் சிங் உறுதி அளித்தார்.
மல்டிமீடிய பல்கலைக்கழகத்தில் இன்று சிறப்பாக நடைபெற்ற தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கான தேசிய நிலையில் தகவல் தொடர்பு தொழில்நுட்பப்போட்டியை அதிகாரப்பூர்வமாக நிறைவு செய்து வைத்து உரையாற்றுகையில் அமைச்சர் கோபிந்த் சிங் மேற்கண்டவாறு கூறினார்.
இது போன்ற போட்டிகள் நமது தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கு மிகச் சிறந்த பலனை தர வல்லதாகும். இதற்கு தமது அமைச்சு முழு ஆதரவும், ஒத்துழைப்பும் நல்குவதாக அவர் குறிப்பிட்டார்.
இந்திய சமுதாயம் தகவல், தொழில்நுட்ப மாற்றங்களைக் கருத்தில் கொண்டு அதற்கேற்ப தன்னை தயார்படுத்திக்கொள்ள வேண்டும் என்பதையும் கோபிந்த் சிங் தமது உரையில் வலியுறுத்தினார்.
மல்டிமீடியா பல்கலைக்கழகம், கோலக்கிள்ளான் இந்து இளைஞர் இயக்கம், தமிழ் டெக் மை மற்றும் மலேசிய தலைமையாசிரியர் மன்றம் ஆகிய அமைப்புகள் முன்னெடுத்த தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கான தேசிய நிலையிலான இந்தப் போட்டியில் 600 க்கும் அதிகமானோர் கலந்து கொண்டனர்.