ஜன.5-
இந்தியாவில் குறிப்பாக தமிழகத்திற்கும், பினாங்கிற்கும் இடையில் இந்திய வர்த்தக, தொழில் வாய்ப்புகள் மீதான கருத்திணக்க ஒப்பந்தம் இன்று கையெழுத்தானது
பினாங்கில் Dewan Sri Penang அரங்கில் இன்று நிறைவுற்ற உலகாவிய தமிழ் வம்சாவளி மாநாட்டில் பினாங்கு இந்திய வர்த்தக, தொழிலியல் சங்கத்திற்கும், உலக தமிழ் வர்த்தக சங்கமான WTCC- க்கும் இடையில் இந்த கருத்திணக்க ஒப்பந்தம் நடைபெற்றது.
பினாங்கு மாநில ஆட்சிக்குழு உறுப்பினரும், மாநாட்டின் இணை ஏற்பாட்டாளருமான டத்தோஸ்ரீ சுந்தராஜு முன்னிலையில் நடைபெற்ற இந்த ஒப்பந்தத்தில் பினாங்கு இந்திய வர்த்தக, தொழிலியல் சங்கத்தின் தலைவர் டத்தோ எஸ். பார்த்திபனும், உலக தமிழ் வர்த்தக சங்கத்தின் தலைவர் செல்வக்குமாரும் கையெழுத்திட்டனர்.
இந்தியாவில் குறிப்பாக தமிழகத்தில் உள்ள தகவல் தொழில்நுட்பம், மென்பொருட்கள், மருத்துவம், சுயத்தொழில் உட்பட பலதரப்பட்ட வர்த்தக, தொழில் வாய்ப்புகளை பினாங்கில் உள்ள இந்திய வர்த்தகர்கள் எவ்வாறு பயன்படுத்திக்கொள்ள முடியும், அதேபோன்று பினாங்கில் உள்ள வர்த்தக, தொழில் வாய்ப்புகளை தமிழகத்தில் உள்ள வர்ததகர்கள் எவ்வாறு கைப்பற்றிக்கொள்வது தொடர்பாக இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து கொள்ளப்பட்டுள்ளது.
பினாங்கு இந்திய வர்த்தக, தொழிலியல் சங்கத்தின் தலைவர் டத்தோ எஸ். பார்த்திபன் விவரிக்கையில் நமது வர்த்தகர்கள் மற்றும் பெண் தொழில் முனைவர்கள் தமிழகத்தில் எவ்வாறு வர்த்தக வாய்ப்புகளை பயன்படுத்திக்கொள்ள முடியும் என்பதை அடிப்படையாககொண்டு இந்த ஒப்பந்தம் நடைபெற்றதாக குறிப்பிட்டார்.
உலக தமிழ் வர்த்தக சங்கத்தின் தலைவர் செல்வக்குமார் விவரிக்கையில் பினாங்கில் உள்ள இந்திய வர்த்தகர்களின் வியாபாரம் உயர்வடைவதற்கும், தொழில்நுட்பத்தை பரிமாறிக்கொள்வதற்கும் சுற்றுலாத்துறையை மேம்படுத்திக்கொள்ளவும் இந்த ஒப்பந்தம் அடித்தளமிட்டுள்ளது என்றார்.
இந்த இரண்டு நாள் மாநாட்டில் கலை, கலாச்சாரம், பாரம்பரிய உணவு, உடை, பண்டைய கால தமிழரின் வரலாறு, பன்னாட்டு சிறு, குறுந்தொழில் முனைவர்கள் கருத்தரங்கம் மற்றும் கல்வி, மருத்துவம், பொறியியல், சித்த, ஆயுர்வேத இயற்கை மருத்துவம், உணவு பதப்படுத்துதல் போன்ற பல்வேறு துறை சார்ந்த கண்காட்சி அரங்கங்களும் நடத்தப்பட்டன.