நாட்டின் கடல் எல்லைகளைப் பாதுகாப்பதில் பாதுகாப்புப் படைகள் எப்போதும் விழிப்புடன் இருப்பதாக உள்துறை அமைச்சு உறுதியளித்துள்ளது. ரோஹிங்கியா அகதிகளின் வருகை அதிகரித்துள்ளதால், மலேசிய கடல்சார் அமலாக்க நிறுவனம் நாட்டின் கடற்பரப்பில் ரோஹிங்கியா அகதிகளை ஏற்றி வரும் படகுகளைத் தொடர்ந்து கண்காணித்து வருவதாக உள்துறை அமைச்சர் Datuk Seri Saifuddin Nasution Ismail தெரிவித்தார். மியான்மரில் உள்ள அரசியல் குழப்பமும் மோசமான வாழ்க்கைச் சூழலும் ரோஹிங்கியா மக்கள் மலேசியாவுக்கு இடம்பெயர்வதற்கான முக்கிய காரணிகளாகும் என்றார். மலேசியாவின் அமைதியான அரசியல் சூழலும் பல கலாச்சார சமூகமும் அவர்களுக்கு ஒரு சிறந்த வாழ்க்கை கிடைக்கும் என்ற நம்பிக்கையை அளிப்பதாகத் தெரிவித்தார்.
இலாங்காவியில் ரோஹிங்கியா அகதிகள் தரையிறங்கிய சம்பவத்தை அடுத்து, அவர்களைக் குடிநுழைவு தடுப்பு மையத்தில் தங்க வைத்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். மலேசியா மாந்தநேய அணுகுமுறையுடன் இந்த விவகாரத்தைக் கையாண்டு வருகிறது. அதே நேரத்தில், நாட்டின் கடல் எல்லைகளில் கடுமையான பாதுகாப்பும் கட்டுப்பாடும் பேணப்படுகிறது. நாட்டின் இறையாண்மையைப் பாதுகாப்பதே முக்கிய நோக்கம் என்று Saifuddin தெரிவித்தார்.