காஜாங், ஜன.30-
தங்களின் ஏழு வயது மகளை அடித்து சித்ரவதை செய்து வந்ததாக நம்பப்படும் காஜாங்கைச் சேர்ந்த ஒரு தம்பதியரை போலீசார் கைது செய்துள்ளனர்.
இச்சம்பவம் தொடர்பில் நேற்று அதிகாலை 1.11 மணியளவில் காஜாங் மருத்துவமனையிலிருந்து கிடைக்கப்பெற்ற போலீஸ் புகாரைத் தொடர்ந்து அந்த தம்பதியர் கைது செய்யப்பட்டதாக காஜாங் மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி நாஸ்ரோன் அப்துல் யூசோப் தெரிவித்தார்.
சுயநினைவு இழந்த நிலையில் கிடந்த அந்த சிறுமியை அதன் பெற்றோர்கள், காஜாங் மருத்துவமனைக்கு தூக்கிச்சென்ற போது, அந்த சிறுமி, சித்ரவதை செய்யப்பட்டு வந்தது கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.
அந்த சிறுமி நீண்ட காலமாகவே சித்ரவதை செய்யப்பட்டு வந்துள்ளார் என்பதற்கு உடலில் பல இடங்களில் காயமும், வீக்கமும், ரத்தக்கட்டும் கண்டு பிடிக்கப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.
புலன் விசாரணைக்கு ஏதுவாக 38 மற்றும் 40 வயது மதிக்கத்தக்க அந்த தம்பதியர் கைது செய்யப்பட்டு, தற்போது விசாரணை செய்யப்பட்டு வருவதாக ஏசிபி நாஸ்ரோன் தெரிவித்தார்.