ஜேர்ஜ்டவுன், பிப்.3
பினாங்கு, தண்ணீர்மலை, அருள்மிகு பால தண்டாயுதபாணி ஆலயத்தில், தைப்பூசத் திருநாளுக்கு முன்னதாக, மாற்றுத் திறனாளிகள், நடக்க இயலாதவர்கள், மூத்த குடிமக்கள், முருகனின் திருவருளை பெறுவதற்கு அவர்களை மலையின் உச்சிக்கு சக்கர நாற்காலிகளில் தூக்கிச்செல்லும் அரும் சேவை, நேற்று ஞாயிற்றுக்கிழமை வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டது.
தொண்டு மனப்பான்மையில் செயலாற்றி வரும் ஓர் அரசு சாரா அமைப்பான மலேசிய தமிழன் உதவும் கரங்கள் இயக்கத்துடன் இணைந்து இந்த அரும் சேவையில் பினாங்கு இந்து அறப்பணி வாரியம் கைகோர்த்தது.
மலை மீது குடிகொண்டிருக்கும் முருகப்பெருமானை 513 படிகளில் ஏறிச் சென்று தரிசிக்க இயலாமல் இருக்கும் மாற்றுத்திறனாளிகளுக்கும், மூத்தகுடிமக்களுக்கும் உதவும் வகையில் மேற்கொள்ளப்பட்ட இச்சேவை, பினாங்கு இந்து அறப்பணி வாரியத் தலைவர் RSN ராயர், துணைத் தலைவர் செனட்டர் டாக்டர் R.A. லிங்கேஸ்வரன், பினாங்கு ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோஸ்ரீ சுந்தராஜு சோமு, இதர ஆணையர்களான டத்தோ J. தினகரன், சண்முகநாதன், திருமதி ஜகுருதி, சந்திரமோகன் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது.

அறப்பணி வாரியத்தின் துணைத் தலைவர் டாக்டர் லிங்கேஸ்வரன், இந்த அருஞ்சேவையின் முக்கியத்துவத்தை திசைகளுடன் பகிர்ந்து கொண்டார்.
மாற்றுத்திறனாளிகளுக்கு உதவுவது மற்றும் அர்த்தமுள்ள தொண்டு சார்ந்த நிகழ்வுகளில் இளைஞர்களின் பங்கேற்பை ஊக்குவிப்பது ஆகிய இரட்டை நோக்கங்களை அடிப்படையாக கொண்டு இச்சேவை மேற்கொள்ளப்பட்டதாக டாக்டர் லிங்கேஸ்வரன் குறிப்பிட்டார்.
இச்சேவையில் சக்கர நாற்காலியில் உள்ள 25 பக்தர்கள் தண்ணீர் மலையில் உள்ள புகழ்பெற்ற மலைக்கோயிலுக்கு தூக்கிச் செல்லப்பட்டனர்.
இதில் 50 தன்னார்வாலர்களுடன் பினாங்கு இந்து அறப்பணி வாரியமும் தன்னை பிணைத்துக்கொண்டதாக டாக்டர் லிங்கேஸ்வரன் குறிப்பிட்டார்.
நடக்க இயலாதவர்களை மலை உச்சிக்கு கொண்டு செல்வது என்பது சவால் நிறைந்த பணியாகும். அனைவரின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக, நிகழ்வு நிறைவு பெறும் வரையில் ஆம்புலன்ஸ்கள் மற்றும் மருத்துவ பணியாளர்கள் தயார் நிலையில் இருந்தனர்.

நிகழ்விற்கு தலைமையேற்ற அறப்பணி வாரியத்தின் தலைவர் RSN ராயர், இந்த நற்சேவையை வழங்கிய தன்னலமற்ற ஆர்வலர்களுக்கு பாராட்டு தெரிவிக்கும் வகையில் அவர்களுக்கு நினைவுச்சின்னங்களை வழங்கி சிறப்பு செய்தார்.
“இந்த முயற்சி வெறும் உடல் ரீதியான உதவி தொடர்புடையது மட்டும் அல்ல; இது மாற்றுத்திறனாளிகள் கலாச்சார மற்றும் ஆன்மீக மரபுகளில் பங்கேற்க அவர்களை ஊக்குவிக்கும் ஒரு பொருள் பதித்த அரும் சேவையாகும் என்று டாக்டர் லிங்கேஸ்வரன் வர்ணித்தார்.