புத்ராஜெயா, பிப்.6-
வங்கி அதிகாரிகளின் உடந்தையுடன் பொதுச் சேவை ஊழியர்களுக்கு சட்டவிரோதமாக பணத்தை பெற்றுக் கொடுத்தது தொடர்பில் மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான SPRM, ஓப் ஸ்கை எனும் புலன் விசாரணையை தீவிரப்படுத்தி வருகிறது.
இந்த விசாரணையில் பலர் கைதாகி வரும் வேளையில் இந்த சட்டவிரோத பண மாற்றத்தில் தொடர்புடையவர்கள் என்று சந்தேகிக்கப்படும் மூன்று பிரபலங்கள் SPRM விசாரணை வளையத்திற்குள் சிக்கினர்.

புத்ராஜெயா, SPRM தலைமையகத்திற்கு ஆஜராகும்படி விசாரணை அழைப்பானை கொடுக்கப்பபட்ட அந்த மூன்று பிரபலங்கள், தங்கள் முகத்தை அடையாளம் காட்டிக் கொள்ள வெட்கப்பட்டுக் கொண்டு, பின் கேட்டின் வழி SPRM அலுவலகத்திற்கு நுழைந்தனர்.
நாட்டின் முன்னணி மலாய் நடிகரும், முன்னாள் போலீஸ் படைத் தலைவர் டான்ஸ்ரீ மூசா ஹசானின் சகோதரருமான டத்தோ ஜலாலுடின் ஹாசான், நாட்டின் தேசிய விண்வெளி வீரர் டத்தோ டாக்டர் ஷேக் முசாப்பார் ஷுகோர் மற்றும் பிரபல மலாய் பாடகி சியானா ஆஈண் ஆகியோரே அந்த மூன்று பிரபலங்கள் ஆவர்.

இந்த மூன்று பிரபலங்களும் சம்பந்தப்பட்ட நிறுவனத்தின் தூதர்களாக விளங்கி வந்துள்ளனர். இந்த மூன்று பிரபலங்களையும் பயன்படுத்தி, சம்பந்தப்பட்ட நிறுவனம் மக்களை மோசடி செய்துள்ளதாக நம்பப்படுகிறது.
சம்பந்தப்பட்ட நிறுவனத்தின் தூதராக செயல்படுவதற்கு இந்த மூன்று பிலபலங்களும் சேவைக்கட்டணமாக தலா 4 லட்சம் ரிங்கிட்டை பெற்றுள்ளனர் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.

இந்த மூவரும் SPRM தலைமையகத்திற்கு காலை 9 மணியளவில் வந்தனர்.