கோலாலம்பூர், பிப்.6-
கோலாலம்பூர், ஜாலான் செந்தூலில் ஸ்ரீ திரெங்கானு பொது அடுக்குமாடி குடியிருப்பு பகுதியில் பத்தாவது மாடியில் உள்ள ஒரு வீட்டில் ஏற்பட்ட தீயில் ஓர் இந்தோனேசிய மாது மாண்டார்.
இதில் 50 வயது மதிக்கத்தக்க அந்த மாது, வீட்டின் குளியல் அறையில் இறந்து கிடந்தது கண்டு பிடிக்கப்பட்டது. இந்த தீ விபத்து குறித்து இன்று வியாழக்கிழமை அதிகாலை 12.38 மணியளவில் கோலாலம்பூர் செயலாக்க நடவடிக்கை அறை ஓர் அவசர அழைப்பைப் பெற்றதாக தீயணைப்பு, மீட்புப்படை அதிகாரி கமாண்டர் இ. யோகேஸ்வரன் தெரிவித்தார்.
செந்தூல், தீத்தி வங்சா மற்றும் ஜாலான் ஹாங் துவா ஆகிய மூன்று நிலையங்களிலிருந்து தீயணைப்பு வண்டிகளுடன் சுமார் 20 வீரர்கள் விரைந்ததாக அவர் குறிப்பிட்டார்.
அவ்விடத்திற்கு வீரர்கள் சென்றடைந்த போது அந்த பொது அடுக்குமாடி குடியிருப்பு பகுதியில் பத்தாவது மாடியில் உள்ள ஒரு வீட்டில் தீ கொழுந்து விட்டு எரிந்து கொண்டிருந்தது.
வீட்டின் நாலாபுறமும் பதவிய தீ, அதிகாலை 1.30 மணியளவில் முழுமையாக கட்டுப்படுத்தப்ட்டது. வீடு 90 விழுக்காடு அழிந்து விட்டதாக யோகேஸ்வரன் தெரிவித்தார்.
குளியல் அறையிலிருந்து மீட்கப்பட்ட மாதுவின் உடல் உரிய நடவடிக்கைக்காக போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.