கோலாலம்பூர், பிப்.19-
நாடாளுமன்றத்தில் முன்மொழியப்பட்ட இனப்பாகுபாடு எதிர்ப்புச் சட்ட தீர்மானம், இனக் கலவரங்களுக்கு வழிவகுக்கும் என்ற எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரின் கூற்றுக்கு அரசாங்கப் பேச்சாளர் ஃபாமி ஃபாட்சீல் கண்டனம் தெரிவித்துள்ளார்.
பாஸ் கட்சியை சேர்ந்த அகமட் மர்சுக் ஷாரியின் இந்தக் கூற்று, ஆத்திரமூட்டும் வகையில் இருப்பதாக ஃபாமி குறிப்பிட்டார்.
ஒரு நாடாளுமன்ற உறுப்பினராக இருப்பவர், அதிக பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டுமே தவிர இன உணர்வுகளை ஆதரிப்பவராகவோ அல்லது பிரச்னையை உண்டு பண்ணக்கூடியவராகவோ இருக்கக்கூடாது என்று தொடர்புத்துறை அமைச்சருமான ஃபாமி தெரிவித்தார்.
மலேசியர்கள் மத்தியில் அச்சத்தை தூண்டி விடுவதற்கு பதிலாக ஒற்றுமையாக வளர்க்கக்கூடியவராக நாடாளுமன்ற உறுப்பினர்கள் விளங்கிட வேண்டும் என்று ஃபாமி வலியுறுத்தினார்.
டிஏபி தலைவர் லிம் குவான் எங் முன்மொழிந்துள்ள இனப்பாகுபாடு எதிர்ப்புச் சட்ட தீர்மானமானது, நாட்டில் கடந்த 1969 ஆம் ஆண்டு நிகழ்ந்த மே 13 கலவரத்தைப் போல மீண்டும் நிகழ்வதற்கு வழி வகுக்கும் என்று பாஸ் நாடாளுமன்ற உறுப்பினர் அகமட் மர்சுக் கூறியது தொடர்பில், அவரை ஃபாமி சாடினார்.