பெட்டாலிங் ஜெயா, பிப்.19-
நேற்று செவ்வாய்க்கிழமை அதிகாலை 2.25 மணியளவில் பினாங்கு பாலத்திலிருந்து கடலில் குதித்ததாக நம்பப்படும் ஆடவரின் சடலம், தீவிர தேடலுக்கு பின்னர் இன்று காலை 9 மணியளவில் கண்டு பிடிக்கப்பட்டது.
பினாங்கு பாலத்தில் 5.5 ஆவது கிலோ மீட்டரில் வாகன நிறுத்தும் இடத்திலிருந்து கடலில் குதித்ததாக நம்பப்படும் அந்த ஆடவரின் சடலம், கடலோரப்பகுதியில் மீட்புப்படையினரால் கண்டு பிடிக்கப்பட்டதாக ஜார்ஸ்டவுன் மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி அப்துல் ரசாக் முகமட் தெரிவித்தார்.
பினாங்கு மருத்துவமனை சவக்கிடங்கிற்கு கொண்டுச் செல்லப்பட்ட அந்த ஆடவரின் சடலத்தை குடும்ப உறுப்பினர்கள் அடையாளம் கண்டதாக அவர் குறிப்பிட்டார்.
அதிகாலை நேரத்தில் பினாங்கு பாலத்திலிருந்து ஒருவர் கடலில் குதித்ததாக பொது மக்களிடமிருந்து கிடைக்கப் பெற்ற தகவலைத் தொடர்ந்து பாயான் லெப்பாஸைச் சேர்ந்த 48 வயதுடைய அந்த ஆடவரைத் தேடும் பணி முடுக்கி விடப்பட்டதாக ஏசிபி அப்துல் ரசாக் தெரிவித்தார்.