கோலாலம்பூர், பிப்.19-
சிறப்பு நடவடிக்கைகளுக்கான பாதுகாப்பு சட்டமான சொஸ்மாவின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ள கைதிகளை விசாரணை செய்வதற்கு சிறப்பு நீதிமன்றம் அமைக்கப்படுவது குறித்து உள்துறை அமைச்சு பரிசீலனை செய்து வருகிறது என்று அதன் அமைச்சர் டத்தோஸ்ரீ சைபுடின் நசுத்தியோன் இஸ்மாயில் தெரிவித்துள்ளார்.
சொஸ்மா கைதிகள் தொடர்பான விவகாரங்கள், அவர்களின் வழக்குகள் உட்பட அந்த பாதுகாப்பு சட்டம் தொடர்புடைய அனைத்து விவகாரங்களையும் அந்த சிறப்பு நீதிமன்றம் கையாளுவதற்கு ஏதுவாக இந்த உத்தேசப் பரிந்துரை ஆராயப்பட்டு வருவதாக அமைச்சர் சைபுடின் இன்று நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.
சிறப்பு நீதிமன்றம் தோற்றுவிக்கப்படுவது மூலம், சொஸ்மா கைதிகள், தாங்கள் சம்பந்தப்பட்ட வழக்கு விசாரணைக்காக நீண்ட நாள் காத்திருக்கும் நிலை தவிர்க்கப்பட முடியும் என்று அமைச்சர் விளக்கினார்.
சொஸ்மாவின் சில சட்டவிதிகளை மீள்பார்வை செய்யும் நடவடிக்கைகளில் சிறப்பு நீதிமன்றம் அமைக்கப்படும் உத்தேசப் பரிந்துரையும் ஒன்றாகும் என்று சைபுடின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு தெளிவுபடுத்தினார்.