கோலாலம்பூர், பிப்.19-
2012 ஆம் ஆண்டு சிறப்பு நடவடிக்கைகளுக்கான பாதுகாப்பு சட்டமான சொஸ்மாவின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ள குற்றவாளிகள், எவ்வளவு கொடூரமானவர்கள், அவர்கள் புரிந்த கொடுஞ்செயல்கள் யாவை என்பது குறித்து நாடாளுமன்றத்தில் இன்று காணொளி வழி திரையில் காண்பிக்கப்பட்டது.
நாட்டின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கு சொஸ்மா சட்டம் எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தது என்பதை, சட்டம் இயற்றும் உச்ச அதிகாரத்தில் உள்ள நாடாளுமன்ற உறுப்பினர்கள் அறிந்து கொள்ளும் பொருட்டு, சொஸ்மா குற்றவாளிகளின் அந்த கொடுஞ்செயல்களின் வீடியோ கிளிப் காட்டப்பட்டன..
சொஸ்மாவின் சில முக்கிய விதிமுறைகள் மறு ஆய்வு செய்யப்பட வேண்டும் என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் பிறப்பித்துள்ள உத்தரவுக்கு ஏற்ப, சொஸ்மா சட்டம் குறித்து, நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு உள்துறை அமைச்சர் டத்தோஸ்ரீ சைபுடின் நசுத்தியோன் இஸ்மாயில் விளக்கம் அளித்தார்.
கடுங்குற்றச்செயல்கள் ஒடுக்கப்படுவதற்கு போலீஸ் துறையினர், சொஸ்மாவின் கீழ் அமல்படுத்த வேண்டிய கடமைகளையும் அமைச்சர் சைபுடின் விளக்கினார்.
காணொளியில் காட்டப்பட்ட படங்களின்படி, சொஸ்மா குற்றவாளிகளால் புரியப்பட்ட அராஜக செயல்களினால் பாதிக்கப்பட்டவர்களின் தலை, கைகால்கள், வயிறு, மூளை என உடல் அவயங்கள் எவ்வாறு கோடாரியினாலும், பாராங்கினாலும் கொடூரமாக வெட்டப்பட்டுள்ளன என்பதைச் சித்தரித்தன.
உள்துறை அமைச்சின் ஏற்பாட்டில் திரையிடப்பட்ட அந்த காணொளியை மக்களை சபா நாயர் டான்ஶ்ரீ ஜொஹாரியுடன் இதர நாடாளுமன்ற உறுப்பினர்கள் இணைந்துப் பார்த்தனர்.