கோலாலம்பூர், பிப்.19-
நாட்டின் ஸ்குவாஷ் தாரகை, எஸ் சிவசங்கரி, உலகத் தரவரிசையில் ஏழாவது இடத்திற்கு முன்னேறிய பிறகு உத்வேகத்தைப் பெற்றுள்ளார். இது இதுவரை அவரது மிக உயர்ந்த சாதனையாகும். தொழில்முறை ஸ்குவாஷ் சங்கத்தின் (PSA) அண்மைய தரவரிசையில், சிவசங்கரி எட்டாவது இடத்தில் இருந்து ஓரிடம் முன்னேறியுள்ளார்.
கெடா, சுங்கை பட்டாணி பிறந்த 26 வயதான சிவசங்கரி, இந்த மாத தொடக்கத்தில் 2025 சின்சினாட்டி கெய்னர் கோப்பையை வென்றதன் மூலம் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அப்போட்டியில், அவர் உலகின் நான்காம் நிலை வீராங்கனையான அமெரிக்காவின் ஒலிவியா வீவரை அரையிறுதியில் தோற்கடித்து, இறுதி கட்டத்தில் அமெரிக்காவைச் சேர்ந்த அமண்டா சோபியையும் தோற்கடித்து, சீசனின் முதல் பட்டத்தைப் பெற்றார்.
தமது அண்மைய தரவரிசை நிலை குறித்து கருத்து தெரிவித்த சிவசங்கரி, இதன் பின்னர் தான் பங்கு பெறும் போட்டிகளில் சிறந்த அடைவுநிலையை அடைய இது உற்சாகம் அளிப்பதாகக் குறிப்பிட்டார். “இதுவரை எனது உயர்ந்த தரவரிசையை அடைய முடிந்ததில் நான் மகிழ்ச்சியடைகிறேன், அனைத்து கடின உழைப்பும் பலனளித்துள்ளது. தொடர்ந்து எனது தரவரிசை நிலையை மேம்படுத்தி சிறப்பாகச் செயல்படுவேன் என்று நம்புகிறேன்,” என்று அவர் கூறினார்.