ஜார்ஜ்டவுன், பிப்.19-
சுற்றுச்சூழலைப் பாதுகாக்கவும், நிலையான எதிர்காலத்தை உறுதி செய்யவும் வரும் மார்ச் மாதம் 1 ஆம் தேதி முதல் பினாங்கு மாநிலத்தில் ஒவ்வொரு நாளும் நெகிழிப்பைகள் இல்லாத பிரச்சாரம் அறிமுகப்படுத்தப்படவிருக்கிறது என்று மாநில வீடமைப்பு மற்றும் சுற்றுச்சூழல் ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோஸ்ரீ சுந்தராஜு சோமு தெரிவித்தார்.
அதேவேளையில் பினாங்கு மாநிலம் முழுவதும் மறுபயன்பாட்டுப் பைகளை இலவசமாக விநியோகிக்கும் பிரச்சாரமும் தொடங்கப்படும் என்று டத்தோஸ்ரீ சுந்தராஜு குறிப்பிட்டார்.
இவ்வாறு செய்வது மூலம் மாநில மக்களிடையே மறுபயன்பட்டுக்குரிய பைகளின் பயன்பாட்டை ஊக்குவிக்க முடியும். அத்துடன் மக்களும் ஒரு நிலையான நடைமுறைககளுக்கு மாறுவதற்கு உதவிட முடியும் என்று டத்தோஸ்ரீ சுந்தராஜு தெரிவித்தார்.
தங்களின் அன்றாட வாழ்வியல் போக்கில் நெகிழிப்பை இல்லாத நடைமுறைக்கு மக்கள் தங்களை உட்படுத்திக் கொள்வதற்கு மார்ச் முதல் தேதியிலிருந்து வரும் ஆகஸ்ட் 31 ஆம் தேதி வரை 6 மாதம் கால அவகாசம் வழங்கப்படும். வரும் செப்டம்பர் முதல் தேதி பினாங்கில் நெகிழிப்பை பயன்படுத்துவதற்கு தடை விதிக்கும் அமலாக்கம் நடைமுறைக்கு வரும் என்று டத்தோஸ்ரீ சுந்தராஜு குறிப்பிட்டார்.
பினாங்கில் Swettenham Pier Cruise உல்லாச கப்பல் முனையத்தில் 2025 ஆம் ஆண்டில் பினாங்கில் ஒவ்வொரு நாளும் நெகிழிப்பை இல்லாத பிரச்சாரம் எனும் திட்டத்தை அதிகாரப்பூர்வமாக தொடக்கி வைத்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில் டத்தோஸ்ரீ சுந்தராஜு இதனை தெரிவித்தார்.